ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி -25

25 

 

 கிரிதரன் விட்டு சென்ற இடத்திலே எவ்வளவு நேரம் அமர்ந்து அழுதாலோ திலோத்தம்மா தெரியாது…

 

 அவன் சென்ற வெகு நேரம் கழித்து பஞ்சாட்சரம் வீட்டிற்குள் நுழைந்தபடி குரல் கொடுத்துக் கொண்டே வர அவர் சத்தம் கேட்டு அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தவள்… அவர் கண் மறைந்து அறைக்குள் வந்தவள்… அவசரமாக மீண்டும் குளித்து வேறு உடைக்கு மாறியவள்…  

 

எதுவுமே நடவாதது போல் நடந்து பஞ்சாட்சரத்துக்கு சந்தேகம் வராது பார்த்து கொண்டாள்… அப்பொழுது தன் மருமகள் முகம் தெளிவில்லாததை கண்டு என்னவென்று விசாரித்தவரிடம் உடம்பு சரியில்ல மாமா என்று மழுப்பிவிட்டவளுக்கு ஏனோ கிரிதரனை பற்றி அவரிடம் கூற மனது வரவில்லை… அது எதனாலோ…??

 

கிரிதரன் மேல் ஏற்பட்ட பயத்திலா அல்லது தந்தை மகனிடையே தன்னால் மீண்டும் ஒரு விரிசல் விழுந்து விடக்கூடாது என்று என்பதாலா… விடையை அவளே அறியாள்…

 

 தான் வந்து விட்டு செல்வதாக சொன்ன பஞ்சாட்சரத்தையும் அவள் வெகுவாக மறுத்துவிட எதிர் வரும் யாரையும் தலைநிமிர்ந்து பாராமல் பள்ளிக்கு கிளம்பி விட்டாள்… நின்று முகம் கொடுத்து பேசினால் இவள் முகமாற்றத்தை கண்டுப் பிடித்து விடுவார்களோ என்கிற அச்சம் தான் பின்னே கிரிதரனின் முரட்டு முத்தத்தில் உதடு சிவந்து வீங்கிப் போய் கிடந்ததே… என்ன ஒப்பனை செய்தும் அதை மட்டும் மறைக்கவே முடியவில்லை…

 

 அவள் எவ்வளவு மறைக்க முயன்றும்… அதையும் மீறி சில நெருக்கமானவர்கள் கேட்டு விட பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன் என கூறி அவர்களின் நம்பாத பார்வையை கவனமாக தவிர்த்து வந்தவளை பள்ளிவாசலிலே வைத்து எதிர்க் கொண்டான் கிரிதரன்…

 

 அவனைக் கண்டவளுக்கு இவனால் தானே அத்தனை பொய் சொன்னோம்…அதுவும் இவன் செய்த காரியத்தை மறைக்க…எல்லாமே இவனால் தான் என பொங்கி வந்தக் கோவத்தோடு அவனை முறைத்து விட்டு பள்ளிக்குள் சென்று விட்டாள் அவசரமாக… 

 

கண்டுக்காமல் சென்றால் போய் விடுவான் என நினைக்க அவனோ போவேனா பார் என்றுஅங்கேயே நின்று விட்டான்… அவனது பார்வை என்னவோ பள்ளிக்குள்ளே தான் இருந்தது… பள்ளிக்குள் செல்லும் மாணவர்களிடம் திலோத்தமாவை சந்திக்க வர சொல்லி தூது அனுப்ப… அத்தனையும் கிழித்து போட்டவள்… தூது வாங்கி வந்தவர்களையும்… வயசுக்கு மீறி வேலை செய்வியா என்று வறுத்து எடுத்து விட்டாள்…

 

இவனால் அன்று முதுகு ஒடிய தோப்புக்கரணம் போட்டவர்கள் ஏராளம்… அதன் பிறகு அவன் அனுப்பிய பியூன் விடு தூது ஆயாம விடு தூது அம்புட்டும் ஆனாமத்தாக ஹண்டில் பண்ணினாள் அவன் மனைவி… எதற்கும் மசியவில்லை… ஸ்கூலுக்கு முன்னாடி வந்து இப்படி மானத்தை வாங்குகிறார் என்று கோபம் தான் பெருகியது 

 

பள்ளி வாசலில் ரோட் சைட் ரோமியோ போல் கிரிதரன் நிற்பதை கண்டு மாணவர்களின் கவனம் சிதறுவதை கவனித்த தலைமை ஆசிரியர் அவனிடம் வந்தார்…

 

 அதுவரை பைக் மீது பந்தாவாக உட்கார்ந்து மேலே தெரிந்த ஜன்னல் வழியாக கிடைத்த திலோவின் தரிசனத்தை ரசித்துக் கொண்டிருந்தவன்… தலைமையாசிரியரை கண்டதும் பவ்வியமாக எழுந்து நின்றான் மரியாதையாக…

 

“தம்பி உங்க அப்பா ஒரு காலத்துல இந்த ஸ்கூல்க்கு ஹெட் மாஸ்டரா இருந்தவருப்பா… அவர் பையன் நீ இப்படி ஒரு பொண்ணுக்காக ஸ்கூல் முன்னாடி வந்து நிக்கிறது நல்லாவா இருக்கு…!!” என பொறுமையாக கேட்க 

 

 “சாரி சார் பொண்ணுக்காக நிக்கல என் பொண்டாட்டிக்காக நிக்கிறேன்…!!” என பவ்வியமாக பதில் சொல்லியவனை கண்டு லேசாக முறுவலித்தவர்… மேலே ஒரு முறை பார்த்து விட்டு இவனிடம் திரும்பியவர்… 

 

“தம்பி தப்பா எடுத்துக்காத்திங்க உங்க விஷயம் எல்லாம் ஊருக்கே தெரியும்…நானும் ஒரு பிள்ளைய பெத்த தகப்பனா அந்தப் பிள்ளைக்கு நல்லது நடக்கனும்னு தான் நினைக்கிறேன்… ஆனா அதுக்கு ஏத்த இடம் இது இல்லைங்களே… படிக்கிற பசங்க இருக்கிற இடம் தம்பி எல்லாம் வயசு பிள்ளைங்க… கெட்டுப்போக ஆயிரம் வழி இருந்தாலும் ஆயிரத்தி ஓராவது வழிய நாமலே காட்டி விட கூடாது பாருங்க அதுக்கு தான் சொல்றேன்… எதுவா இருந்தாலும் ஸ்கூல் தான்டி வெளியே வச்சுக்கோங்க… மத்தப்படி எனக்கும் நீங்க சேர்ந்தா சந்தோசம் தான்… உங்க அப்பா என்னை பார்க்க வரும் போது எல்லாம் உங்க இரண்டு பேர் வாழ்க்கைய நினைச்சு தான் வருத்தப் படுவார்… அவருக்காகவாது நீங்க இரண்டு பேரும் சேரனும்…!!”என தன்மையாக எடுத்து கூற…

 

அவர் சொல்லுக்கு கட்டுப் பட்டவன்… மன்னிப்பையும் வேண்டினான் கூடவே அவரிடமே தனக்கான காரியத்தையும் சாதித்துக் கொண்டான்… என்னவா வேற என்ன பிரின்சிபல் விடு தூது தான்…

 

 இவன் வேண்டி கேட்டுக் கொண்டதற்காகவோ அல்லது தன் நண்பனின் மகனுக்கு உதவிச் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்திலோ திலோவை தேடி தானே சென்றார் தலைமையாசிரியர்…

 

 தலைமையாசிரியரே வந்து சொல்லும் பொழுது மறுக்க முடியாதக் காரணத்தால்… வேண்டா வெறுப்பாக கிரிதரனை காண வெளியே சென்றாள்…

 

ரோட்டை கடந்து அவனிடம் வந்தவள்… மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக அவனை முறைத்து விட்டு அவனது ரசனை பார்வையை தவிர்த்து விட்டு வேறு புறமாக திரும்பி நின்றுக் கொண்டவள்… 

 

இப்போ எதுக்கு என்னை தேவை இல்லாம தொந்திரவு பன்றிங்க… ஸ்கூல் டைம்ல பசங்க முன்னாடி கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம ஏன் இப்படி நடந்துக்கிறீங்க உங்களுக்கு என்ன தான் வேணும்…என எரிந்து விழ…

 

“நீதான்டி வேணும் வரியா…??” என பட்டென்று சொல்லிவிட்டான் கிரிதரன்… அவனை விரிந்த விழிகளுடன் ஏறிட்டவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு அதை தனது உதடுக்குள்ளே புதைத்துக் கொண்டான்… 

 

அதில் மேலும் கடுப்பாகியவள் கோவித்து கொண்டு திரும்பி செல்ல பார்க்க…அவள் முன்பாக கைகளை நீட்டி இடை மரித்தவன்…

 

ஏய் திலோ நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு என்ன… நான் காலைல கோபப்பட்டு அப்படி பேசி இருக்க கூடாது தான் சரியா ஆனால் நீயும் என்னை அப்படி பேசி இருக்கக் கூடாது அதுவும் தப்பு தான் தப்புக்கு தப்பு சரியா போச்சு… அதை அப்படியே விட்டுவிடுவோம்… நான் இப்ப எதுக்கு வந்திருக்கேனா நாம ரெண்டு பேரும் நம்ம வாழ்க்கைய பத்தி பேசி ஒரு முடிவுக்கு வரலாம்… என்ன சொல்ற எனக்கு நீ வேணும் உன்கூட வாழனும் அதுக்காக நீ என்ன கேட்டாலும் நான் செய்ய தயார்… அதுக்கு முன்னாடி நிறைய விஷயங்களை உன்கிட்ட சொல்லனும் நான் காத்துட்டு இருப்பேன்… இப்ப ஸ்கூல் டைம் ல உன்ன நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பல ஆனா மறக்காம சாயந்திரம் படித்துறைக்கு வந்துடு உனக்காக நான் காத்துட்டு இருக்கேன் மறக்காம வந்துடு நீ வர வரைக்கும் நாங்க இங்க இருந்து எங்கேயும் போக மாட்டேன்… என்னோட பிடிவாதம் உனக்கு நல்லாவே தெரியும் சோ கண்டிப்பா நீ வர… என்று விட்டு போக…

 

நான் எங்கையும் வரமாட்டேன்… திலோ பிடிவாதமாக கூற 

 

 நீ வர நீ வந்து தான் ஆகணும்… என இவனும் பிடிவாதமாக கூறிக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்…

 

“வீணா ஏமாராதீங்க… நான் சொன்னா சொன்னது தான் நான் எங்கேயும் வர மாட்டேன்…!!”திலோ கத்த…

நீ வர இல்லை நான் வர வைப்பேன் அவ்ளோ தான் என இவனும் வண்டியை கிளப்பிக் கொண்டு போகும் போதே கத்தியப்படி கண் மறைந்து சென்று விட்டான்…

 

பார்க்கலாம் அத்தான் உங்க பிடிவாதம் ஜெயிக்குதா இல்லை என் தன்மானம் ஜெயிக்குதான்னு நிச்சயம் நான் போய் அவனை பார்க்க கூடாது என்று தீர்மானம் செய்து விட்டு பள்ளிக்குள் சென்றவள் பாடத்தில் மூழ்கி விட…

 

 அன்றைய பொழுது ஒரு வித அலைபுறுதல் உடனே கழிய மாலை பள்ளி முடிந்து மணி அடிக்க அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்…

 

சொன்னது போலவே கிரிதரன் படித்துறையில் திலோத்தமாவிற்காக காத்திருக்க அவளும் அவனைக் அங்கு கண்டும் காணாதது போல் கடந்து சென்று விட்டாள் …

 

 நான் வரமாட்டேன் என அழுத்தத்துடன் இவளும்… நீ வராமல் இங்கிருந்து செல்ல மாட்டேன் என பிடிவாதத்தில் அவனும் வாழ்க்கையை பனையம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்…

 

 வாழ்க்கையில் தவறு செய்த மனிதன் எவனுமே கிடையாது… அப்படி ஒருவன் இருந்திருந்தால் அவன் மனித பிறவியாக இருக்க முடியாது… தவறு செய்து திருந்துவதால் தானே கடவுளே மனிதன் என்ற பெயரிட்டாரோ என்னவோ… தான் செய்த தவறை உணராமல் திரும்பத் திரும்ப தவறு செய்பவனை மிருகம் என்கிறோம்… தான் செய்த பிழைகளை திருத்தி திருந்தி வருபவனை ஏனோ இந்த சமூகம் ஏற்பதே இல்லை அவன் செய்த தவறுகளை மீண்டும் சுட்டி காட்டி அவனை அந்த பாழ் நரகத்துக்குள்ளே தள்ள விரும்பப்படுகிறது… மன்னிப்பை கேட்கிறவன் மனுஷன் மன்னிப்பை வழங்குகிறவன் பெரிய மனுஷன் என்பார்கள்…

 

ஏனோ திலோவிற்கு கிரிதரனை மன்னிக்க மனம் வரவில்லை… அதே சமயம் கண்டிக்கவும் துணிவில்லை ஆனால் கிரிதரனை தள்ளி நின்று தண்டித்தாள்… இவர்களின் நீயா நானா போட்டியில் வென்றது என்னவோ கிரிதரனின் பிடிவாதம் தான்… 

 

 நீ வராமல் நான் அந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என்று சொன்னது போலவே திலோவிற்காக ஆற்றங்கரப்படுகையில் காத்திருந்தான் இரவு முழுவதும் கொட்டும் பனியையும் பாராது… யார் தடுத்தும் கேட்காமல் தான் பிடித்த பிடியிலே… மார்கழி மாதத்து முழு பனியில் நனைந்ததன் பலன் கடும் காய்ச்சல்… குளிரில் உடல் நடுங்கி வெட்டி இழுத்த பின்பே அவனை குண்டு கட்டாக தூக்கி வந்தார் தையல் நாயகி…

 

மறுத்தவர்களின் சேவையையும் அதே பிடிவாதமாக மறுத்தவன்… மருந்துகளையும் ஏற்க மறுக்க… ஹை பிவேரா இருக்கு இப்படியே விட்டா ஜன்னி வச்சிடும் அப்புறம் காப்பாத்துறது ரொம்ப கஷ்டமா போயிடும் எடுத்து சொல்லுங்க அவருக்கு என மருத்துவர்கள் அறிவுரை தான் வழங்க முடியும்… மாட்டேன் என ட்ரிப்ஸை பிடிங்கி போட்டு அடம் பண்ணுபவனிடம் வேற என்ன செய்ய முடியும்… 

 

கிரிதரனின் வாழ்வும் சாவும் திலோத்தமாவின் பதிலில் இருக்கிறது என்னும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான் அவளை…

 

 பாழாப் போன மனம் வேறு அவனை நினைத்து துடிக்க… எல்லாத்தையும் மறந்து விட்டு அவனை காண ஓடினாள் பேதை…

 

 உடல் முழுவதும் ஆயிரம் ஊசி முனைகள் கொண்டு துளைக்கும் வலியை தாங்க முடியாமல் வேதனையில் துடித்தவனை கண்டு… வாயை பொத்தி கதறி விட்டாள் பெண்ணவள்…

 

ம்மாஆ என ஈன சுரத்தில் முனகியவன் மருந்தை எடுக்க மறுக்க… 

 

கண்ணீரை துடைத்து கொண்டவள் தையல்நாயகியின் கையில் இருந்த மருந்துக்காக கையை நீட்ட… அவளையும் வலியில் கிடந்து அனத்தும் தன் மகனையும் ஒன்று சேர பார்த்தவர் பெருமூச்சொன்றை விட்டுவிட்டு எழுந்தவர்… மருந்தை திலோவிடம் ஒப்படைத்து விட்டு வார்த்தைகள் இன்றி மௌனமாக ஒதுங்கிக் கொண்டார்…

 

 கட்டிலில் கிரிதரனின் தலைமாட்டில் அமர்ந்தவள் அவன் தலையை தூக்கி தன் மடியில் படுக்க வைத்து மருந்தை புகட்ட…

 

 வெடுக்கென்று கண்ணை திறந்து யார் என பார்த்தவன்… வந்திருப்பது திலோ என்று அறிந்ததும் அமைதியாக மருந்து எடுத்துக் கொண்டான்… 

 

 இவ்வளவு நேரம் இவன் பண்ணின அமர்க்களம் என்ன இப்பொழுது இவன் மருந்தை அமைதியாக எடுத்துக் கொள்வது என்ன?? என்று அங்கிருந்தவர்கள் வியப்பாக பார்க்க… தையல் நாயகி அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு மற்றவர்களை அங்கிருந்து கிளம்பி கொண்டு வெளியே சென்று விட்டார்…

 

 மருந்தின் கசப்பு தொண்டையில் இறங்கி எரிச்சல் எடுக்க லொக் லொக் என இருமியவன் நெஞ்சை நீவி விட்டாள் திலோத்தமா… அவன் இருமல் அடங்கியதும் எதிரே சுவரை பார்த்து வெறித்து இருந்தது அவள் பார்வை… அவள் கைகளோ தன்னிச்சையாகவே எழுந்து கிரிதரன் தலையை வருடிக் கொடுத்தது அவள் சுயமில்லாமல்… 

 

“ஏன் அத்தான் இவ்வளவு பிடிவாதம் உங்களுக்கு… இந்த பிடிவாத குணத்தாலையும் முரட்டுத்தனத்தாலையும் எதை ஜெயிக்க நினைக்கிறீங்க அத்தான்… என்னையா??? ம்ஹும்ம் இல்லை அத்தான் நிச்சயம் இல்லை… என்ன அடைய நினைச்சு நீங்க காட்டிய பிடிவாதத்தையும் அடாவடித்தனத்தையும்… கொஞ்சமாவது காதலா அன்பா அக்கறையா காட்டி இருந்தா நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து இருப்பேனோ என்னவோ… ஆனா அப்போ நீங்க காண்பித்த உதாசினமும் அவமானமும் இளக்காரமும் ஒண்ணா இப்ப என் மனசுல முன்னாடி வருது…

 

நான் என்ன செய்வேன் அத்தான் நான் என்ன தப்பு பண்ணேன்… நானும் சாதாரண பொண்ணா ஒரு வாழ்க்கை வாழ நினைச்சது தப்பா இல்ல நான் பொண்ணா பொறந்ததே தப்பா… எனக்கே தெரியல அத்தான்…

 

 விவரம் தெரியாத வயசுல அப்பாவை இழந்தேன்…விவரம் தெரியும் போது அம்மாவின் ஆதரவை இழந்தேன்… எல்லாம் இழந்தும் உங்கம்மாவால கொட்டி கொட்டியே வளர்க்க பட்டேன்…அப்போ கூட கௌரவமா இங்கிருந்து போகணும்னு நினைச்சேனே ஒழிய ஒரு நாளும் நெறி தவறி போக நான் நினைச்சதே இல்ல அத்தான்.. அப்படி பட்ட என்னை நீங்க என பொங்கி வந்த அழுகையை இதழ் கடித்து அடக்கினாள்…

 

ஏன் அத்தான் அப்படி பண்ணீங்க நீங்க அப்படி நடந்துக்குவீங்கனு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை தெரியுமா… உங்களை என் மனசுல நான் எந்த இடத்தில வச்சிருந்தேன் ஆனால் நீங்கள் அதை எல்லாம் ஒரு நொடியில இடிச்சு தரமட்டம் ஆகிட்டீங்களே… 

 

 எப்படி அத்தான் என்னால பழசை எல்லாம் மறந்துட்டு உங்க கூட நான் வாழ முடியும்… பஞ்சாயத்துல வச்சு அவ்வளவு அசிங்கமா பேசினார்களே… அதை மறக்கவா இல்ல தாலி கட்டின கையோட என்னை விட்டுட்டு போனீங்களே அதை மறக்கவா… ஏன் அத்தான் என்னை விட்டுட்டு போனீங்க… நான் என்ன தப்பு பண்ணேன்… தவறா நடந்து கிட்டது நீங்க… தாலி கட்டினது நீங்க… ஆனா தண்டனை மட்டும் எனக்கா… ஏன் போனீங்க அத்தான்… நீங்க செஞ்ச தவறு நினைச்சு வருந்தி போனீங்களோ இல்ல இவள் கூட எல்லாம் ஏன் வாழனும்னு போனீங்களோ தெரியாது ஆனால் நீங்க போனதுக்கு அப்புறம் நான் பட்ட வலியும் வேதனையும் உங்களுக்கு தெரியுமா… இவள் நடத்த கெட்டவள் அதான் அவன் வாழாம போயிட்டான்… இன்னும் எவ்வளவோ சொன்னாங்க… அ.. அதெல்லாம் சொல்லவே நாக்கு கூசுது… ஏன் அத்தான் நீங்க என்ன கூட்டிட்டு போயிருந்தா இந்த ஊர் என்ன தப்பா பேசி இருக்குமா இல்ல என் வாழ்க்கை இப்படி பாழாப்போனது நினைச்சு எங்க அம்மா தான் உயிர விட்ருப்பாங்களா…

 

 என்னால எதை வேணாலும் மன்னிக்க முடியும் அத்தான் ஆனா உங்களால என் அம்மா உயிர் போச்சு அது உங்களால திருப்பி தர முடியுமா இல்ல தானே… போன உயிரை யாராலும் திருப்பி தர முடியாது அத்தான் நான் ஒத்துக்குறேன் ஆனா எங்க அம்மா சாவுக்கு கூட நீங்க வரலையே அத்தான்… அதுதான் என்னால தாங்கிக்க முடியல பரம எதிரியா இருந்தா கூட சாவுக்கு வந்து போறது தான் நம்ம பண்பாடு… ஆனால் நீங்கள் விரோதியா நினைச்சு எங்க அம்மா சாவுக்கு கூட நீங்க வரமாலே பழி வாங்கிட்டீங்களே… கொல்லி போட ஆள் இல்லாமல் எங்க அம்மாவோட சவுத்துக்கு முன்னாடி நான் கதறுனது எனக்கு இன்னமும் இங்க இருக்கு அத்தான்… 

 

அதை நினைச்சா இப்போ கூட எனக்கு உங்க மேல கோவம் கோவமா வருது… ஆனாலும் என் மனசு உங்களுக்காக தவிக்குது… எனக்கு தெரியல நடந்ததெல்லாம் மறந்துட்டு எப்படி உங்க கூட வாழறதுன்னு சத்தியமா எனக்கு தெரியல… எல்லாத்தையும் மறந்துட்டு உங்க கூட வாழ ஒரு வழி இருந்தா சொல்லுங்க அத்தான்… இதுக்கு மேல நான் என்னத்தை சொல்ல தெரியல என குனிந்து கிரிதரனை பார்க்க அவனோ மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்…

 

ம்ம்ம் வலியில் அனத்தி கொண்டே படுத்து இருந்தவனை கண்டு விரக்தி புன்னகை திலோவின் இதழில் தவழ அதற்கு நேர் மாறாக அவள் கண்ணில் கண்ணீர் வழிந்து கிரிதரன் நெற்றில் பட்டுத் தெறித்தது… என்ன நினைத்தாளோ பெண்ணவள் அவன் சுயநினைவின்றி இருக்கும் தருணத்தில் அவன் நெற்றியில் முத்தமிட்டு விலகினாள் கடைசியாக…

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top