27
தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் கணவனை வெறித்த விழிகளுடன் ஏறிட்டாள் மேனகா…
எத்தனை தடவை இவள் இதே போல் கெஞ்சி இருப்பாள்…மண்றாடி இருப்பாள்… குடி வேண்டாம் அவன் அரவம் அவன் நட்பு வேண்டாம் என்று… கேட்டானா இவன்… அப்படி என்ன பெரிய தப்பு செஞ்சேன் இவனை திருமணம் செய்ய விரும்பியதை தவிர… நான் சொன்னதை ஒரு தடவை கூட நம்பவே இல்லையே… ஒரே ஒரு தரம் நான் சொன்னது உண்மையா இருக்காதா யோசிச்சு இருந்தா இன்னைக்கு…இன்னைக்கு… ச்சே என்று எண்ணிய மாத்திரத்திலே துச்சமாக சீராளனை உதறி விட்டு எழுந்தவள்…
“என்னை தொடாதீங்க… என் புருஷன் என்கிற அருகதைய நீங்கள் எப்போவோ இழந்துட்டிங்க… ச்சை என் மூஞ்சிலே முழிக்காதிங்க… அப்படி என்ன மாமா நான் பாவம் பண்ணேன் உங்களுக்கு ஒத்துக்கிறேன் உங்க விருப்பம் இல்லாமல் உங்களை கட்டாய படுத்தி கல்யாணம் செஞ்சுக்கிட்டேன் தப்பு தான் மன்னிக்க முடியாத தப்பு தான் ஒத்துக்கிறேன்… அதுக்காக நீங்கள் செஞ்சது எல்லாம் சரியா… குடிச்சீங்க கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு குடிச்சீங்க பொறுத்துக் கிட்டேன்… அளவில்லா வெறுப்பையும் உங்க அவமானப் பேச்சையும் கூட பொறுத்துக்கிட்டேன்… ஏன்னா நான் செஞ்ச தப்பு உங்களை அந்த அளவுக்கு காயப் படுத்தி இருக்குனு எனக்கு தெரியும்… அதுனால பொறுத்துக் கிட்டேன்… எந்த ஒரு பொண்ணும் நல்ல கணவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைப்பா… ஒரு குடிகாரனை கணவனா நினைக்க மாட்டாள்… ஆனால் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஏன் தெரியுமா??? ஏன்னா உங்களை எனக்கு அவ்வளவு புடிக்கும் மாமா நான் கம்பீரமா பார்த்து வளர்ந்த மாமா இன்னைக்கு வாழ்க்கையை தொலைச்சிட்டு குடிகாரனாய் இருக்கிறாரே… யாருமே உங்களை பற்றி கவலைப் படல உங்களுக்காக யோசித்து உங்கள பழையபடி மாற்றி உங்க கூட சந்தோசமா வாழனும்ன்னு தான் நான் அவ்ளோ பிடிவாதமா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… நான் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு எனக்கு இப்போ புரியுது மாமா… என்னைக்காவது ஒருநாள் என்னைப் புரிஞ்சி நீங்க மாறு வீங்கன்னு நினைச்சேன் ஆனால் நீங்க… போதும் மாமா என்னால முடியல… என்னை விட்ருங்க எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல… ஐயோ என் வாழ்க்கைய நானே அழிச்சிட்டேனே அம்மா… என்னை மன்னிச்சுடுமா என கால்கள் மடங்கி கதறினாள் காரிகை…
மேனகையின் அழுகை சீராளனை அசைத்துப் பார்க்க அவளை சமாதானம் செய்யும் எண்ணத்தில் அவளருகே செல்ல… அவனை உறுத்து விழித்தவள் பார்வை… “எட்டியே நில்” என்று எச்சரிக்க… அதற்கு கட்டுப்பட்டவன் போல் ஒரு அடி பின்னால் சென்றான்…
ஏன் மாமா நான் அவனை பற்றி சொல்லும் போது ஒரு தடவை கூட எனக்காக யோசிக்கலையா… உங்கப் பொண்டாட்டியா கூட வேணாம் உங்க அக்கா பொண்ணா கூடவா யோசிச்சு பார்க்க தோணல நம்ம வீட்டு பொண்ணு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்லுவாளா??? மாட்டாளா?? அப்படியே அவள் சொல்றது எத்தனை உண்மையா இருக்கும்ன்னு கூடவா யோசிச்சு பார்க்கமாட்டிங்க…
ஒவ்வொரு பொண்ணும் ஸ்கூலுக்கு காலேஜுக்கு வேலைக்கு போற இடத்துல எல்லாம் இவனை மாதிரி ஆட்களால் எத்தனை துன்பத்துக்கு உள்ளாகுறாங்க தெரியுமா…?? அவங்க எல்லாம் ஏன் தெரியுமா வாயவே திறக்கிறது இல்லை… எல்லாம் உங்கள மாதிரி ஆளால தான் வீட்ல இருக்குறவங்களே பெத்த பிள்ளைகளையும் கூட பொறந்த சகோதரியையும் கட்டிய மனைவியையும் நம்பறது இல்ல… அப்படியே சொன்னாலும் நீங்க என்ன பண்ணிட போறீங்க… நீ சரியா இருந்தா அவன் ஏண்டி உன் பின்னாடி வரப் போறான்… மொத்த பழியையும் தூக்கி பொண்ணுங்க மேல தான் போட போறீங்க… வெளில அவனுங்க கொடுக்கிற தொல்ல தாங்க முடியாததால மாமா நாங்க வீட்ல இருக்குற உங்க கிட்ட சொல்றோம் ஆனால் நீங்க கொஞ்சம் கூட எங்களை புரிஞ்சிக்காம அவனுங்களுக்கு மேல எங்கள நோகடிக்கிறீங்க… எல்லாம் தெரிஞ்ச நீங்களே எங்களை நம்பாத போது நாங்க எங்க மாமா போவோம்…??? என சீராளனை பார்த்து கையேந்த…
ஐயோஓ என்னை மன்னிச்சுடு புள்ள என அவள் கைகளில் முகம் புதைத்து அழலானான்…
தன் கைகளில் ஈரம் உணர்ந்தாலும் அவளது மரத்த இதயத்தில் துளி அளவுக் கூட மருந்தாக வில்லை… ஆம் சீராளன் அவளுக்கு செய்த அத்தனையும் அவளது இதயத்தில் இறங்கி ஆறாத ரணமாய் ஆழமாய் இறங்கி விட்டது…
“ஏன் மாமா இதுவே அந்த ரதி சொல்லி இருந்தா நம்பி இருப்பிங்கல்ல…!!” என ஒரு மாதிரியான குரலில் கேட்டவளை விலுக்கு என்று நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் பல கலவையான உணர்வுகளை பிரதிபலிக்க எப்படி உணர்ந்தான் என்று சொல்ல முடியவில்லை… ஞான சம்பட்டியால் அவன் மண்டையில் அடித்தது போல் வலித்தன…
புள்ள… அது… நான் அப்படி… இல்லை…?? என்ன வார்த்தையை கோர்த்து அவளுக்கு ஆறுதல் சொல்ல என முடியாமல் திணறித்தான் போனான் அந்த வளர்ந்த தடியன்…
அவன் திணறலை பார்த்து விரக்தி புன்னகை ஒன்றை உதிர்த்தவள்… எழுந்து வெளியே செல்ல… திடுக்கிட்டு போனான் சீராளன்… அவள் தன்னை பிரிந்து போவாள் என அதுவரை கூட அவன் நினைத்து பார்க்கவில்லை…
வாசல் வரை போனவள் கதவை இழுத்து பூட்டி விட்டு திரும்ப அதிர்ந்து ஆசுவாசமடைந்த சீராளனின் முகத்தை பார்த்தவள்…
என்ன வாசல் வரப்போனவள் திரும்பி வந்துட்டாளேன்னு பார்க்கிறிங்களா…?? ரொம்ப எல்லாம் சந்தோசப் பட்டுக்காதிங்க…உங்களை நம்பி என் மொத்த குடும்பத்தையும் நான் தூக்கி எறிஞ்சிட்டு வந்து இருக்கேன்… திரும்பி எந்த மூஞ்ச வச்சுட்டு போய் நான் நிக்க… பிடிக்குதோ பிடிக்கலையோ இந்த ஜென்மத்துல எனக்கு எல்லாமே இந்த வீட்ல தான்…வாழ்வோ சாவோ அது என்னோடவே போகட்டும் நானா தேர்ந்தெடுத்த வாழ்க்கை இது அப்போ அனுபவச்சி தானே ஆகணும்… நடக்கிறது விதி படி நடக்கட்டும்… ஆனால் இனி உங்க மூஞ்சிலே முழிக்க மாட்டேன் இந்த வீட்ல மற்ற ஜடப் பொருள் எப்படி அசையாமல் கிடக்குதோ அதே போல் தான் நானும் இனிமே உங்க விருப்பம் போல் குடிங்க கூத்தடிங்க என்ன வேணாலும் பண்ணுங்க… இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… என்று விட்டு உள்ளே சென்றவளை செய்ய அறியாது பார்த்து நின்றான் சீராளன்…
*****
உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் அடைந்ததும் யார் தடுத்தும் நில்லாமல் கனடா சென்று விட்டான் கிரிதரன்…
திலோத்தமாவிற்கு அவனது பிரிவு முன்பை விட பெரிய வலியை கொடுத்தது… அவன் அழைத்தும் பதில் சொல்லாது விடுத்தவள் அவனையும் போ போக வேண்டாம் என்றும் தடுக்கவில்லை…
ஆனால் அவனது பிரிவு பெரும் வலியை கொடுத்தது மட்டும் உண்மை… அவன் கிட்டே இருந்தால் எட்டி நிற்கிறாள் எட்டி இருந்தால் வெறுத்து போகிறாள்… விந்தையின் வினோதமாக பெண்ணின் மனம் அல்லல் படுகிறது…
இம்முறை கிரிதரன் செல்வதற்கு முன் ஊர் பெரியவர்களை சந்தித்து… தங்கை திருமணத்துக்காக விடுப்பு எடுத்து வந்திருப்பதால் திரும்பி போயே ஆக வேண்டிய கட்டாய நிலையை எடுத்து கூறி விளக்கியவன்… இந்த ஜென்மத்தில் தன் மனைவி திலோத்தமா மட்டும் தான் என உறுதிப் பட எழுதிக் கொடுத்து விட்டு தான் சென்றான்…
வெள்ளப் போக்கின் வேகத்தில் ஆற்றில் அடித்து செல்லப் படும் மண் போல காற்று வீசும் திசைக்கு பட்டம் போவது போல காலம் செல்லும் திசைக்கு இவர்கள் வாழ்வும் சென்றது…
சீராளன் மதுவை விட்டு பூரணமாக திருந்தி விட்டத் தொழிலை மீண்டும் அடி மட்டத்தில் இருந்து மேலே கொண்டு வர அதிகம் உழைத்தான்… குடித்து பாழாக்கியதிற்கும் சேர்த்து கடுமையாக உழைத்தான்… முன்பு யாருக்கு செய்ய வேண்டும் இருந்தா என்ன பாழா போனா என்ன என்கிற எண்ணம் ஆனால் இப்போது அவனுக்கு மனைவி இருக்கிறாள்… அவளுக்காக சேர்க்க வேண்டும் அவளை மற்றவர்கள் எக்காரணம் கொண்டும் ஏளனமாக பார்த்து விட கூடாது என்று ஓடி ஓடி உழைக்கிறான்… கணவன் தான் மனைவியின் அடையாளம் அவன் நடத்தையில் தான் மனைவியின் சுய மரியாதை கவுரவம் அடங்கி இருப்பதை காலம் கடந்தாலும் கண்டுக் கொண்டான்…
மேனகையை புரிந்துக் கொண்டதன் பலனாக அவள் அவனை மன்னிப்பதற்காக காத்து கிடக்கிறான்… நிச்சயம் என்றாவது ஒருநாள் அவள் மன்னிப்பு அவனுக்கு கிடைக்கும் அவனும் மற்றவர்கள் போல் மனைவி பிள்ளை என்று வாழ்வான் என்கிற நம்பிக்கையின் ஒளி அவனிடம்…
இங்கோ திலோத்தமா முற்றிலும் முடங்கி விட்டாள்… அவள் தேவை எது என்பதையும் அவள் மறந்து போனாள்… ஊன் உறக்கம் தொலைத்து பல நாள் ஆகிறது… தலைவனை பிரிந்து தலைவி பசலை நோயால் வாடுவது போல் கிரிதரனை பிரிந்து இவளும் வாடினாள்… ஆனால் அந்த உண்மையை ஒப்புக்கொள்ளத் தான் அவள் மனம் மறுக்கிறது…
புயலாக வந்தான் அவளை சுருட்டி வீசி விட்டு திரும்பவும் காணாமல் சென்று மறைந்து விட்டான்… என அவன் மேல் தான் தப்பு என்றே அவள் மனதில் சொல்லி சொல்லி பதிய வைத்துக் கொண்டாள்… கூடவே அவன் மேல் உள்ள காதலையும் சேர்த்து தான் என்பதை மறந்து போனாள்…
மருமகளின் நிலையில் கவலை கொண்ட பஞ்சாட்சரம் வேறு வழி இன்றி மகனுக்கு கொடுத்த வாக்கை மீறினார்…
அவர் அப்படி என்ன செய்தார் அதனால் திலோவின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன அடுத்தப் பகுதியில்…