33
சில மாதங்கள் கழித்து…
மேனகையை காண அன்று வீட்டிற்கு வந்தார் தையல்நாயகி அவர் முன்பு போல் இப்பொழுது இல்லை… நிறைய மாற்றங்கள் அவரிடம்…
முதலில் தன் தம்பி தப்பு செய்தவன் என்று அதுவரை அவனை வெறுத்து ஒதுக்கியவர்… மேனகை தானே முன்வந்து தன் தவறை ஒப்புக்கொள்ள… அடித்து விலாசிவிட்டார்… அடித்து அடித்து ஓய்ந்து போனவர்க்கு மனசே விட்டு போனது… இதுநாள் வரை அவரது வளர்ப்பு தவறாக போக வில்லை என்று கர்வமாக திரிந்தவர்… இப்படி தன் மக்களே போட்டு உடைத்து விடுவார்கள் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை… அடி மேல் அடி விழுந்து அவரை பக்குவப்படுத்தி விட்டது…
மகளை மன்னித்து தம்பியை மருமகனாக ஏற்றுக் கொண்டார்…
ஐயா ராசா இவள் சொல்ற மாதிரி நான் உன்னை வேத்து ஆளா ஒரு நாளும் நினைச்சது இல்லை… ஊர் ஊரா போகும்போதெல்லாம் என் தம்பிக்கு இந்த ஊர்லயாவது ஒரு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டாளான்னு நான் தேடாத ஊர் இல்லையே… வயசு புள்ளையையும் வாழ்க்கைய தொலைச்ச பிள்ளையையும் வச்சிக்கிட்டு நெருப்பு கட்டாத குறையா திரிஞ்சி கிட்டு இருந்தேன்… நான் பெத்த பாரத்தை இறக்கி வச்சதுக்கு அப்புறம் உனக்கு ஒரு நல்லதை கட்டாயப் படுத்தியாவது பண்ணி வச்சி புடனும்னு நினைச்சு இருந்தேன்… நீ இந்த குடிய நிப்பாட்டி புடனும்ன்னு நான் போகாத கோயில் இல்ல வேண்டாத சாமி இல்ல நீ என் கூட பொறந்த பொறப்புடே உன்னை எப்பிடி நான் கை விடுவேன்… இந்த சிறுக்கி மாதிரி நீயும் என்னை நினைச்சிட்டியா ராசா… நீ மட்டும் என்னை தப்பா நினைச்சு புட்டா எனக்கு இந்த உடம்புல உசுர வச்சிக்கிறதே வீணா போயிடும் என்று தன் தம்பியின் கரங்களில் முகம் புதைத்து அழுக… தாங்குவானா சகோதரன்…
எக்கா என்ன பண்ற நீ எந்திரி முதல்ல …. உன்ன பத்தி எனக்கு தெரியாதா அது ஏதோ சின்ன புள்ள விவரம் தெரியாம பேசினா நீ போய் அத கேட்டு விசனப்பட்டுக்கிடக்க என்று ஆறுதல் கூறிட… அவர்களின் உறவுநிலை சீரானது… அடுத்த தெருவில் இருந்தாலும் மகளை எண்ணிய மாத்திரத்தில் வந்து பார்க்க மாட்டார் தையல்நாயகி காரணம் இன்றி அவரும் வரமாட்டார் அதே போல் மேனகையும் அவர் வீட்டுக்கு வர விட மாட்டார்…
உன்னை எப்ப கட்டி கொடுத்தேனோ அப்போவே அது தான் உன் வீடு… என் தம்பி தான் உனக்கு எல்லாம்… அம்மா வீடு அடுத்த தெருவுல இருக்குன்னு அடிக்கடி வந்து உட்காருர வேலை வச்சுக்காத… என கண்டிப்பாக சொல்ல… மேனகையின் மனதில் முள்ளாக தைக்க தான் செய்தது…
ஒரு பெண் கழுத்தில் தாலி ஏறி விட்டால் அவள் பொறந்த வீடு கூட அவளுக்கு அந்நியமாகி விடுகிறது இந்த மண்ணில்…
மேனகையைத் தேடி உள்ளே வந்த தையல்நாயகி கண்ட காட்சியில் அப்படியே நின்று விட்டார்…
அப்படி என்ன காட்சி தானே கேக்குறீங்க… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல… சீராளன் பரீட்சைக்கு படிக்கும் தன் மனைவிக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தான்…
“ இது என்னடி கூத்து ஆம்பள ஊட்டி விட்டு பொட்ட புள்ள நீ தின்னுகிட்டு இருக்க… ஏற்கனவே வேலைக்கு போறேன் வேலைக்கு போறேன்னு பாதி வேலைய அவன் தலையில கட்டி விடுற… இப்ப படிக்க போறேன்னு புதுசா பாசாங்கு காட்டிட்டு திரியிற… என் தம்பி தலையில் நல்லா மிளகாய் அரைச்சிட்டு ஏமாத்திட்டு சுத்துறடி நீ…!!”என மகளை வசை பாடிக் கொண்டே உள்ளே வந்தார்…
“அக்கா சும்மா புள்ளய திட்டாத அதுவே ராப்பகலா பரீட்சைக்கு சோறு தண்ணி இல்லாம படிச்சிட்டு கிடக்கு அதை போய் குறை சொல்லிக்கிட்டு… நம்ம புள்ள படிச்சா நம்ம குடும்பத்துக்கு தானக்கா கௌரவம்… அதெல்லாம் என் தங்க புள்ள நல்லபடியா படிச்சு பெரிய ஆளாய் வருவா…!!” என பெருமிதமாக கணவன் கூறக் கேட்டவள் கண்களில் அத்தனை அன்பு வழிந்தோடியது…
“க்கும் உன் பொண்டாட்டிய ஒன்னு சொல்லிட கூடாதே வந்துருவான் என்கிட்ட வரிஞ்சி கட்டிட்டு… விட்டால் அவளை இடுப்புல தூக்கி வச்சி கொஞ்சுவ போல… என்ற தையல் நாயகிக்கும் மனசுக்குள்ளே மகளைத் தாங்கும் கணவன் அமைந்ததில் சந்தோஷம்தான்… அதை வெளிக்காட்டிக் கொள்ளும் இயல்பு அவரிடம் இல்லையே…
“அவ்வளவு தான தூக்கி கொஞ்சிட்டாப் போச்சி…” என சீராளன் இழுத்துக் கூற குப்பென முகம் சிவந்து போனவளுக்கு பொறையே ஏறி விட்டது… கண்டதை பார்த்து படித்து விட்டு வந்து அவளிடம் கலாப வித்தைக் காட்டும் கணவனால் திண்டாடி போகிறாள் மேனகை… இதில் இவன் சொன்ன பாவம் வேறு நேற்று இரவு கூடலை நினைவு படுத்த வெட்கம் பிடுங்கி தின்ன தண்ணி குடிக்கும் சாக்கில் உள்ளே ஓடி விட்டாள்…
மேனகை தையல் நாயகியின் கட்டாயத்தால் தான் ஆசிரியர் படிப்பை படித்தாள் என்பது சீராளனுக்கு தெரிய வர… அவளுக்கு பிடித்த படிப்பை படிக்க வைத்தே தீருவேன் என்று அவளை படிக்க வைக்கிறான்… “யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என் பொண்டாட்டி அவளுக்கு பிடிச்சது செய்ய அவளுக்கு உரிமை இருக்கு… அவள் கூட எப்பவும் நான் இருப்பேன்… என்று விட அதற்கு மேல் தட்டி பேச அங்கு யாருக்கும் துணிவு இல்லை…
அவள் படிப்பு முடியும் வரை குழந்தை வேண்டாம் என்று இருவரும் ஒரு மனதாக முடிவு எடுக்க… மேனகை தன் கடைசி பரீட்சைகளை எழுதிக் கொண்டு இருக்கிறாள்…
என்னக்கா விஷயம் இல்லாட்டி நீ என் வீடு வரைக்கும் தேடி வர மாட்டியே என்ன விஷயம்…?? என சீராளன் கேட்க…
“அது ஒன்னும் இல்ல தம்பி நம்ம கிரி பொண்டாட்டி மாசமா இருக்காளாம்… அதான் நம்ம குல சாமிக்கு வேண்டிக்கிட்டு கிடா வெட்டலாம்ன்னு இருக்கேன்… அதுக்கு தான் உன்ன பார்த்து நேரில் ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாம்னு வந்தேன்…!!” என்க
சந்தோசம்க்கா தேதிய சொல்லு எல்லாத்தையும் சிறப்பா செஞ்சிடலாம் ஆமா அவுக எப்போ வரங்கலாம் என்று கேட்க…
தெரியலடா உன் மாமா கிட்ட கேட்டா அஞ்சு மாசம் வரைக்கும் பிளைட்டு ஏறக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம்… அதான் ஆறு முடிஞ்சு ஏழுக்கு கூட்டிட்டு வந்துக்கலாம் சொல்லிவிட்டேன்… அதுக்குன்னு நேர்த்திய தள்ளி வைக்க முடியுமா… வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கு ஒரு நோவும் வந்துட கூடாதுன்னு நம்ம பூசாரிய கேட்டு நாமலே வேண்டுதல் நிறைவேற்றி விடலாம்ன்னு இருக்கேன்…
சாமிக்கு கணக்கு வைக்க கூடாது பாரு அதுக்கு தான் என்று அவர்களை அழைத்து விட்டு சென்றார்… சொன்னது போலவே பிறக்கப் போகும் தன் பேரப்பிள்ளைக்காக வேண்டுதலையும் நிறைவேற்றினார் தையல்நாயகி…
திலோத்தம்மாவுக்கு ஏழாம் மாதமும் வந்தது கிரிதரனை அழைத்து வரச் சொன்னால்…
அம்மாவுக்கு என் மனைவியை பிடிக்காது அவளையும் என் பிள்ளையையும் ஏதாவது செஞ்சுட்டா என்னால பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது அதனால நான் அங்க கூட்டிட்டு வரமாட்டேன் இங்கேயே வச்சு பாத்துக்குறேன் குழந்தை பிறந்ததும் சொல்றேன் நீங்க வேணா வந்து பாருங்க என்று மகன் பேசியதை கேட்டு நெஞ்சே வெடித்து விட்டது அவருக்கு…
ஆத்திரமாக ஃபோனை பிடிங்கியவர்… அப்படி என்னடா
கொடுமை உன் பொண்டாட்டிக்கு நான் செஞ்சுட்டேன்… ஆள் ஆதரவு இல்லாம நின்னவள வீட்டுக்கு கூட்டி வந்து சோறு போட்டு வளர்த்தேனே அதுவா??? சீக்கு வந்து படுத்த படுக்கையா கிடந்த அவள் ஆத்தாளுக்கு வைத்தியர் வச்சி ஊழியம் செஞ்சி பார்த்துக் கிட்டேனே அதுவா… எக்கேடோ கெட்டுப்போக விடாம வயசு புள்ளய பொத்தி பொத்தி வளர்த்தேனே அதுவா… இதெல்லாம் இந்த காலத்துல யாருடா உனக்கு சும்மா பண்ணுவா… ஆமாம் நான் சுடு சுடுன்னு பேசுவேன் தான்… எனக்கு மனசுல ஒன்ன வச்சு வெளியே ஒன்னு பேச தெரியாது… அதுதான் என் சுபாவம் அதுக்குன்னு நீ அம்மாவை இப்படி பேசுவியாடா…
வெயிலும் மழையும் உன் மேல படாம பொத்தி பொத்தி வளர்த்ததுக்கு நீ காட்டுற தாய் பாசம் இது தானடா… உங்க அப்பா அடிச்சி போட்டா கூட பரவாயில்லை என்று உனக்கு மறைச்சு மறைச்சு செஞ்சதுக்கு எல்லாம் நல்ல நன்றியை காட்டிட்டடா… அவர் உன்னை ஊதாரி ஊதாரி என்று உதாசீனப்படுத்த போதெல்லாம் உன்னை அணைத்து ஆறுதல் படுத்தியது இந்த கை தான டா…
அப்படி என்னடா பெரிய தப்பு நான் பண்ணிட்டேன் உன்னையே பெத்து வளர்த்தது நான்தான்டா… நான் உன் பொண்டாட்டி பிள்ளையையும் ஏதாவது செஞ்சுருவேனாடா… அந்த அளவுக்கு கல்நெஞ்சகாரியாடா நானு…
ஒத்துக்குறேன் ஒன்னும் இல்லாத வீட்ல இருந்து வந்துட்டாளே என்று உன் பொண்டாட்டி மேல எனக்கு கோவம் இருக்கு தான்… அதுக்குன்னு அவ வயித்துல வளர என் குடும்ப வாரிசு அழிக்கிற அளவுக்கு என்னை கொடுமைக்காரியா நினைச்சிட்டியேடா பாவி…
ஐயோ ஊரே கூடி உன்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தின போது கூட உனக்காக கடைசி வரைக்கும் நின்னு கதறுனதும் போராடினதும் இந்த அம்மா மட்டும்தான் டா… யாருக்கு எப்படியோ ஆனா என் பிள்ளைகளுக்கு நான் நல்ல அம்மாவா தான் டா இருந்தேன்…
நீ எப்படி வேணா நினைச்சுட்டு போ… ஆனால் என் மனச அறிந்து நான் யாருக்கும் எந்த துரோகமும் செஞ்சதில்ல… அன்னைக்கு உன்னை பஞ்சாயத்துல அவமானப்படுத்தி விட்டாளேன்னு தான் எனக்கு அந்த புள்ள மேல கோபமே ஒழிய… அந்த புள்ளைக்கும் எனக்கும் மத்தபடி என்னடா பகை…
நான் செஞ்ச தப்பு ஒன்னே ஒன்னு தான் அந்த புள்ளைய படிக்க விடாம பண்ணினது… பொம்பள புள்ளைய படிக்க வச்சா நாளை பின்ன புருஷன மதிக்க மாட்டாளுங்க என்று சொல்லிக் கொடுத்து வளர்ந்தவடா நான்… அது ஒன்னும் என் தப்பு இல்லையே வழிவழியா காலம் காலமா எங்களுக்கு(பெண்களுக்கு) சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டது தப்புனு எனக்கு எப்படி தெரியும்… ஆனாலும் காலம் கடந்து அது தப்புன்னு நான் புரிஞ்சுகிட்டேன் இல்ல புரிஞ்சிகிட்டு தானே மேனகைய நான் படிக்க வச்சு என் தப்பை நான் திருத்திக்கிட்டேன்… ஏன்டாப்பா எல்லா தப்பையும் செஞ்சுட்டு நீங்க திருந்தினால் நாங்க ஏத்துக்கணும்… அதையே நாங்க செஞ்சா நீங்க ஏத்துக்க மாட்டீங்க அப்படித்தானே… வளர்த்த கெட மார்ல பாயும் சொல்லுவாங்க நீ இன்னைக்கு அதை புரிய வச்சிட்டடா… உன் வாயால இதையெல்லாம் கேக்கணும் என்றா நான் தவம் இருந்தேன்… ச்சே போடா இனி யாரும் எனக்கு வேண்டாம்… என்றவர்க்கு உறவுகள் கசந்து விட்டது…
தாயின் வார்த்தைகளில் செயலற்று நின்றான் கிரிதரன்…
தையல்நாயகி இடம் இருந்து ஃபோனை வாங்கிய பஞ்சாட்சரம்… டேய் கிறுக்கு பயலே எருமை மாடு மாதிரி வளர்ந்து இருந்தாலும் பெத்தவ கிட்ட எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதாடா… உன் கண்ணுல தூசி விழுந்தால் கூட அவள் நெஞ்சில் நெருப்பு விழுந்த மாதிரி துடிச்சு போயிடுவாடா… என் பிள்ளைக்கு இது சேரும் என் பிள்ளைக்கு இது சேராதுன்னு உங்க ரெண்டு பேரையும் பார்த்து பார்த்து வளர்த்தவடா… வெளிய கொஞ்சம் கரடு முரடாக இருந்தாலும் உள்ள அவள் பாசம் கொண்டவள்… அவள பத்தி தெரியாமலா உன் பொண்டாட்டியை
கூட்டி வந்து அவகிட்ட விட்டேன்… கடிஞ்சு பேசினாலும் அவள் பேசுறதுல ஒரு நியாயம் இருக்கும்… கோபமா பேசினாலும் அதில் ஒரு அக்கறை இருக்கும்… கண்டிப்போட வளரும் பிள்ளைங்க தான் வாழ்க்கையிலே நல்லா இருக்கும் நினைச்சு அப்படியே வளர்த்துட்டா அதுக்குன்னு அவளுக்கு பாசம் இல்லாம போயிடுமா… நீ என்ன மாதிரி தப்பு எல்லாம் செஞ்ச கொஞ்சம் யோசிச்சு பாரு ஊரே உன்ன ஒதுக்கி வச்சப்ப உனக்காக உருகினவ உன் அம்மா தான் உன் பொண்டாட்டி இல்லை… நீ எப்படி வேணாலும் நினைச்சுக்கோ எனக்கு அதை பத்தி கவலை இல்லை…
எனக்கு தெரியும் என் பொண்டாட்டி எப்படிப் பட்டவள்ன்னு… உனக்கு வேணும்னா உங்க அம்மா வேண்டாதவளா இருக்கலாம் எனக்கு எல்லாமே அவள் மட்டும் தான் டா எல்லாம்… என் பொண்டாட்டிய ஒதுக்கி வச்சி வர எதுவும் எனக்கு தேவையில்லை அது நான் பெத்த பிள்ளையா இருந்தாலும் சரி, இல்ல நாளைக்கு கொள்ளி வைக்க போற பேரப் பிள்ளையாக இருந்தாலும் சரி… வைடா ஃபோனை என கோபமாக பேசி விட்டு வைக்க… முதல்முறையாக தன் கணவரின் நேசத்தை உணர்ந்தார் தையல் நாயகி…
காலம் கடந்தாலும் காட்சிகள் மாறினாலும் காதல் மட்டும் என்றுமே மாறாது… அது இளமையானாலும் சரி முதுமையானாலும் சரி… மண்ணில் புதைந்தாலும் வைரம் ஜொலிப்பது போல்… ஒருவருக்கொருவர் புரிந்து வாழும் வாழ்க்கையில் நிச்சயம் காதல் ஜொலிக்கும்…
இதோ அடுத்த பிளைட் பிடித்து தன் மனைவியை அழைத்து கொண்டு வந்து விட்டான் கிரிதரன்…
வந்தவன் நேரே சென்றது தையல்நாயகி இடம் மன்னிப்பை கேட்க தான்… அவருக்கு இதயத்தை கத்தியால் கிழித்து விட்டு மன்னிப்பு கேட்பது மருந்தாகவில்லை…
தன் அன்னையின் உயிரற்ற விழியில் அவன் செய்தது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு தெரிய வர… நொந்துக் கொண்டான்…
மகனிடம் பேசாவிட்டாலும் மருமகளையும் அவள் பெற போகும் பேர பிள்ளையையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார்… அவளுக்கு தேவையான லேகியம் பிடித்த உணவு பதார்த்தங்கள் செய்து அவளை எந்த வேலையும் செய்ய விடாது பத்திரமாக பார்த்து கொண்டார்
அடுத்த இரண்டாவது மாதத்தில் அழகான பெண் பிள்ளையை பெற்று எடுத்தாள் திலோத்தமா…
புறா குஞ்சாக இருந்த மகளை நடுங்கிய விரல்களால் வாங்கியவன்… அள்ளி முத்தமிட்டு தன் அன்னைக் கையில் கொடுத்து அங்கேயே சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து… “என்ன மன்னிச்சிடுங்கமா உங்க அருமை எனக்கு இப்போ புரியுது… !!”என்க அதற்கு மேல மகன் மீது கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை தையல்நாயகியால்… மகனுக்காக இல்லாவிட்டாலும் தன் பேத்திக்காக மன்னித்து விட்டார்…
மகளை தன் அன்னையிடம் கொடுத்து விட்டு மருந்தின் வீரியத்தில் படுத்திருந்த மனைவியை காண சென்றான்… கண்மூடி கிடந்த அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் கண்ணில் ஒற்றை நீர் துளி…
விழியால் உன்னை தேடி…
மனதால் மணி மண்டபம் கட்டி…
இருளில் உன்னை தொலைத்து…
இதயத்தால் உன்னை மீட்டு…
ஊடுருவி செல்லும் உன் விழியால்
உயிர்வரை பாயுதே காதல்
என் பைங்கிளியே உன்னிடம்…
சுபம்…
நன்றி…
வணக்கம்…
இந்த கதையோட எபிலாக் பிறை முகமதில் வீழ்ந்தேனடி கதையில் சேர்ந்தே வரும் செல்லம்ஸ்… மீண்டும் அடுத்த கதையோடு உங்களை நான் சந்திக்கிறேன் நன்றி…
வாழ்க வையகம்…
வாழ்க வளமுடன்…
sema super sis