அத்தியாயம் 30
மகன் அடித்து விட்ட அதிர்ச்சியில் எழுந்து நிற்க கூட முடியவில்லை ராஜமாணிக்கத்தால்.
“அப்பாஆஆ” என்று ஓடிவந்த அரசியை “உள்ளே போ அரசி” என்ற தென்னரசுவின் சிம்மக்குரலில் பயந்து வீட்டுக்குள் ஓடியவள் “அம்மா அப்பாவை அண்ணா அடிக்குறாங்க” என்று தாயிடம் புகார் கூறினாள் அவளுக்கு தந்தையின் முழு பரிமாணமும் தெரியாமல் போய்விட்டதே!
குமுதாவோ மகளுக்கு தன் கணவனின் போக்கிரித்தனம் தெரியக்கூடாதென அரசியை அறைக்குள் தள்ளி கதவை மூடிவிட்டார்.
குமுதா பக்கத்து ஊரில் நர்ஸாக இருந்தவர் அவரை எப்படியோ தன் வார்த்தை ஜாலத்தில் பேசி மயக்கி தனக்கு கல்யாணம் ஆகி மனைவி இறந்து விட்டாள் ஏழு வயதில் மகன் இருக்கிறான் என்ற விசயத்தையே மறைத்து குமுதாவுடன் வாழ்ந்துக் கொண்டிருந்தார் ராஜமாணிக்கம்.
அரசி பிறந்த பிறகுதான் குமுதாவிற்கு ராஜமாணிக்கத்தை பற்றி முழு விவரமும் தெரிய வந்தது. “என்னை ஏன் ஏமாற்றினீங்க?” என்று அழுது புலம்பிய குமுதாவை “உன்னை கடைசி வரை சந்தோசமா வாழ வைக்குறேன் நீதான் என் பொண்டாட்டி ஆனா நாம ஒன்னா வாழறது யாருக்கும் தெரியக்கூடாது” என்று சத்தியம் வாங்கிக்கொண்டார்.
குமுதா காதல் திருமணம் செய்துக் கொண்டதால் அவரை அவரின் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜமாணிக்கத்தை விட்டு வேறு ஊருக்கு போய்விடலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் என்னை விட்டு போனா உன்னையும் பிள்ளையையும் கொன்னுடுவேன் என்று மிரட்டியிருக்க குமுதாவிற்கு வேறு வழி தெரியாமல் ராஜமாணிக்கத்துடன் வாழ ஆரம்பித்தார்.
இப்போது ராஜமாணிக்கத்தை தென்னரசு அடிக்கும் போது அவரின் மனதில் அழுத்திக்கொண்டிருந்த பாரம் இறங்கியிருந்தது. என்னை போல நிறைய பொண்ணுங்களை ஏமாற்றியவனுக்கு தாமதமாக தண்டனை கிடைச்சிருக்கு என்று பெரும்மூச்சு விட்டு சமையல்கட்டுக்குள் சென்றார் குமுதா.
“டேய் என் வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு என்னையே அடிக்குறியா இந்த பஞ்ச பரதேசிகளை கூட்டிட்டு வெளியே போயிடு இது என்னோட வீடு” என்று வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு மகனிடம் எகிறிக்கொண்டு வந்தார் ராஜமாணிக்கம்.
“அட போயா நீதான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்… தோப்பு, வீடு எல்லா சொத்தும் என் பேர்ல இருக்குனு மறந்து போய்ட்டியா..! நைட் முழுக்க இருந்தியே அந்த தோட்டத்து வீடு மட்டும்தான் உன் பேர்ல இருக்கு அங்கேயே போய் கிடந்து சாவு என்னை பெத்த தாயை தள்ளி விட்டு கொன்ன உன்னை இப்பவே அடிச்சு சாகடிச்சுடுவேன் ஆனா நீ உயிர் போற வலியை அனுபவிக்கணும் அதை நான் பார்க்கணும்டா வெளியே போடா” என்று ராஜமாணிக்கத்தின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான்.
ராஜமாணிக்கமோ “நீ வல்லவராயன் பேச்சை கேட்டு தப்பு செய்யாத அப்பன் மேல வீணா பழிப்போடுற டா மகனே” என்று நல்லவனை போல நாடகம் ஆடி கண்ணீர் விட்டார்.
“என்னை ஏமாத்த நான் என்ன வாய்ல விரல் வைச்சு திரியுற சின்னப் பையனா இந்த வீட்டுப்பக்கம் தலை வச்சு படுத்திராதே ஓடி போயிடு” என்று நடுவீதியில் வைத்து அவமானப்படுத்தினான் தென்னரசு.
ஊர் மொத்தமும் ராஜமாணிக்கத்தை காறிதுப்பியது. ராஜமாணிக்கத்தின் வயலுக்கு வேலைக்கு போன பெண்களை வார சம்பளம் கொடுக்கும்போது அவர்களது விரலை தொட்டும் அசிங்கமாக பேசிய பெண்கள் ராஜமாணிக்கத்தை ஏளனமாக பார்த்து சிரித்தனர்.
ராஜமாணிக்கம் கீழே விழுந்து எழமுடியாமல் தடுமாற “எழுந்திருங்க” என்று அவருக்கு கையை கொடுத்தான் ராயன்.
“புள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டி விடுறியாடா என் மகனை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டல உன் குடும்பத்தை நிம்மதியா வாழ விடமாட்டேன்” என்று அவனது கையை உதறிவிட்டு தரையில் கையை ஊன்றி தட்டுமாறி எழுந்தார் ராஜமாணிக்கம்.
ராயனனோ “கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவுனு உனக்கு தெரியாதா ராஜமாணிக்கம்?” என்று ஏளன புன்னகை சிந்தினான் ராயன். இதற்கு மேல் அங்கே நிற்பாரா ராஜமாணிக்கம் உடல் முழுக்க அழுக்கு கொண்ட மனிதன் திருந்துவானா? அடிப்பட்ட கிழட்டு நரி போல ஓடிப்போனார் தோட்டத்து வீட்டுக்கு.
கண்ணனும் தீபாவும் காஷ்மீர் ஹனிமூன் சென்று விட்டு வந்தனர்.
ஒருவாரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு காலேஜ் செல்ல தொடங்கினாள் முல்லை. மூன்று மாதங்கள் முடிந்து விட்டது காலையில் ராயன்தான் முல்லையை காலேஜ் அழைத்துச் செல்வான். மாலையில் நீலகண்டன் முல்லையை அழைத்துச் செல்வார். மகளும் தந்தையும் வீட்டுக்குள் பேச முடியாததை காரில் வரும் போது பேசிக்கொள்வார்கள் ராயனால் முல்லையிடம் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை. ஆனாலும் அவள் தன்னிடம் உண்மையை மறைத்துவிட்டாளே என்ற ஆதங்கத்தில் அவன் மனதில் நெருடல் இருக்கவே அவளிடம் நெருங்க முடியவில்லை அவனால்.
நதியாவுக்கு கை காயம் ஆறியிருக்க மீண்டும் அவளிடமிருந்து தள்ளியே நின்றான். காலையில் நதியாவை காலேஜில் இறக்கிவிட்டான் பாலாஜி. மாலை பால் கறந்து பால்காரர்களுக்கு பாலை கொடுக்க வேண்டும் சாய்ந்தரம் காலேஜ் முடிந்து நதியா பஸ்ஸில்தான் வந்தாக வேண்டிய நிலை. கேட்டருகே சென்றவளுக்கு பாலாஜியிடம் பணம் வாங்க மறந்தது நினைவு வர பாலாஜியை திரும்பி பார்த்தாள் அவன் பைக்கை எடுத்துவிட்டான்.
“மாமா நில்லுங்க” என்று பாலாஜியின் அருகே ஓடினாள் அவனோ பிரேக்போட்டு நிறுத்தி “என்ன” என்று புருவம் உயர்த்தினான்.
“செமஸ்டர் ஃபீஸ் கட்டணம் காலையில கேட்கணும்னு இருந்தேன் மறந்துட்டேன்” என்றாள் தயங்கியபடியே .
“வீட்டுலயே கேட்க வேண்டியதுதானே நான் என்ன பரம்பரை பணக்காரனா
எந்நேரமும் பாக்கெட்டுல பணத்தோட இருக்க! இரு ஏ.டிம்ல பணம் எடுத்துட்டு வரேன்” என்று காய்ந்து விட்டு பைக்கை எடுத்தான்.
பாலாஜியின் பின்னால் ராயனின் கார் வந்து நின்றது கவனிக்கவில்லை பாலாஜி.
தங்கையை மிரட்டிக்கொண்டிருப்பதை கண்டு கை முஷ்டியை இறுக்கினான். தங்கை கணவனாக தன் நண்பனாகவே இருந்தாலும் தன் கண் முன்னால் நதியாவை திட்டுவதை அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ரோட்டுல வச்சு இப்படித்தான் கோபமா பேசணுமா பாலாஜியின் மீது ஆத்திரப்பட்டான் ராயன்.
முல்லையோ ராயன் கை முஷ்டியை இறுக்குவதை பார்த்தவளுக்கு ‘பாலாஜி அண்ணாகிட்ட சண்டைக்கு போயிடுவாரோ’ என்று பயந்தாள். ராயன் நதியா மேல் பாசத்தை கொட்டி வைத்திருக்கிறான். அதிலும் பாலாஜி அதட்டியதில் அவள் கண்கள் கலங்க நின்றிருந்ததையும் பார்த்த முல்லை பெரிய பிரயளம் வந்துவிடுமோ என்று அச்சத்தோடு ராயனையே பார்த்திருந்தாள்.
ஆனால் ராயனோ தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் “இறங்கு புள்ள சாய்ந்தரம் நான் வந்து அழைச்சிட்டு போறேன்” என்றவனோ காரை எடுத்துச் சென்றுவிட்டான் அங்கே நின்றால் பாலாஜியை அடித்து விடுவோமோ என்று அச்சப்பட்டு சென்றுவிட்டான் ராயன்.
நதியாவோ முல்லையை முதல் நாள் காலேஜில் பார்த்ததும் “முல்லை உன்கூட பேசி எத்தனை நாள் ஆச்சு என்னை மன்னிச்சுடுடி உனக்கு தேவையில்லாம கெட்ட பேரு வாங்கிக்கொடுத்துட்டேன்” என்றாள் கண்ணீருடன் வருத்தமாக.
“கையை எடுடி எனக்கு மட்டுமா கெட்ட பேரு வாங்கிகொடுத்த உங்க அண்ணா நிமிர்ந்த நெஞ்சோடு ஊருக்குள்ள நடப்பாரு அவரை மண்டபத்தல கூனிக்குறுக வச்சிட்டியே! என்கூட மச்சான் முகம் கொடுத்து சரியா பேசறது கிடையாது தெரியுமாடி! உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையாடி மண்டபத்துல அத்தனை பேர் முன்னாடி பாலாஜி அண்ணாவை வரவைச்சு அவருக்கும் கெட்ட பேரு வாங்கி கொடுத்து இருக்க பைத்தியகாரத் தனமா நடந்திருக்க… நம்ம வீட்டு பெரியவங்க எல்லாரையும் அவமானப்பட்டு நிற்க வைச்சிட்ட” என்று அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள் முல்லை.
“என்னை அடிக்க உனக்கு உரிமையிருக்குடி நான் அவரசப்பட்டு எடுத்த முடிவு எவ்வளவு பெரிய விபரீதம்னு எனக்கு அப்போ தெரியலை உங்களை எல்லாம் விட்டு பிரிஞ்சு வந்தபோதுதான் என்னால குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவை வரவச்சுட்டேன்னு தவிச்சேன். நம்ம குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணுறேன்டி! அம்மாவை போன வாரம் கோவிலில் பார்த்து பேச போனேன் அம்மா என்னை திட்டிட்டு போயிட்டாங்கடி யாரும் என்கிட்ட முகம் கொடுத்து பேசலை நீயாவது என்கிட்ட பேசுடி” என்று கண்ணீர் விட்டாள் நதியா.
“மச்சான் உன்கிட்ட பேசவேணாம்னு சொல்லியிருக்காரு” என முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“இருக்காதுடி அண்ணா நிச்சயமா என்கிட்ட உன்னை பேசவேணாம்னு சொல்ல மாட்டாரு” என்று மூக்கை உறிஞ்சினாள்.
“உனக்கு செய்த கொடுத்த சத்தியத்துனாலதான் உன் காதல் விசயத்தை அவருக்கிட்ட மறைச்சேன் அதுக்கு தண்டனையும் இப்போ அனுபவிச்சிட்டு இருக்கேன்டி..! இனிமே உன்கிட்ட பேசமாட்டேன்” என்று வேகமாக பேசி சென்றுவிட்டாள்.
நதியாவோ “நீயாவது என்கிட்ட பேசுவேனு நினைச்சேன்டி ஆனால நீயும் பேசலை எனக்கு பிறந்த வீடு பக்கம் யாருமே சப்போர்ட் இல்லை” என்று சோர்ந்த முகத்துடன் முல்லையின் பக்கம் உட்கார்ந்தாள்.
முல்லையே வேறு இடத்தில் சென்று உட்கார்ந்துக் கொண்டாள். நதியாவாக பேசினாலும் அவளுடன் பேசுவதை தவிர்த்து வந்தாள். இன்று பாலாஜி அவளை திட்டுவதை பார்த்தவளுக்கு நதியாவை பார்க்க பாவமாய் இருந்தது. அவளது கையில் எப்போதும் பணம் புரண்டுக் கொண்டேஇருக்கும் வீட்டில் நீலகண்டன், தெய்வநாயகம், ராயன் என்று அனைவரும் அவளுக்கு பணத்தை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கேண்டீனில் அவளை சுற்றி நண்பிகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் அவள் கேண்டீன் செல்வது கூட இல்லை.
முல்லை பாலாஜியையும் நதியாவையும் தாண்டித்தான் சென்றாக வேண்டும். அவளுக்கு சங்கடமான நிலை.
என் தங்கச்சியை திட்டுவியா என்று ராயன் காருக்குள் உட்கார்த்து பார்த்த பார்வையில் பாலாஜிக்கு முகம் கருத்துவிட்டது.
பாலாஜியோ முல்லையிடம் பேசவில்லை. அவள் கர்ப்பமாய் இருப்பது தெரியும் எப்படி இருக்கனு கூட கேட்க முடியாத நிலை பாலாஜிக்கு. இதற்கு காரணமான நதியாவின் மேல் அத்தனை கோபமும் திரும்பியது.
“ஏன் டி வீட்லயே பணம் என்கிட்டே கேட்டிருந்தா நான் உன்னை திட்டியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. உன் அண்ணா என்னை முறைச்சு பார்த்துட்டு போறான்! என்னை வில்லனா ஆக்கிட்டியே” என்று அவளை கரித்துவிட்டு ஏ.டிம் சென்று பணம் எடுத்து வந்தவன் “சாய்ந்தரம் பார்த்து வா” என்று கூறிவிட்டு பைக்கில் கிளம்பிவிட்டான்.
“எல்லாரும் என்னை திட்டுங்க! ஆசைப்பட்டவன் கிடைக்க வேறு வழி எனக்கு தெரியலை!” என்று புலம்பிக்கொண்டே காலேஜிற்குள் சென்றாள்.
பாலாஜியுடன் சந்தோசமாக இருப்பாளென்று நினைத்திருந்தாள் முல்லை. ஆனால் இன்று பொது இடத்தில் பல பேர் பார்க்க பாலாஜி நதியாவை திட்டியது அவளுக்கு உறுத்திக்கொண்டிருந்தது.
நதியா அவள் இடத்தில் உட்கார்ந்ததும் “பணம் இல்லைனா என்கிட்ட சொல்லு நான் தரேன்டி” என்றாள் மெல்லிய குரலில்.
“இப்ப மட்டும் பணம் கொடுத்தா அண்ணாவுக்கு சந்தேகம் வராதா எங்ககிட்டயே பணம் இருக்கு நீ ஒண்ணும் தரவேணாம்” என்று முகத்தை தூக்கிக்கொண்டாள் நதியா.
ஆனால் கொஞ்ச நேரத்தில் நதியாவின் அக்கௌண்டிற்கு ஒரு லட்சம் பணம் போட்டு விட்டிருந்தான் ராயன். நதியா சாப்பிடும் நேரம் “ஐ அண்ணா எனக்கு ஒன் லேக் அமௌன்ட் போட்டு இருக்காரு. என் அண்ணன் கோபம் தீர்ந்து என்னை வீட்டுக்கு அழைச்சுட்டு போவாரு” பக்கத்தில் அமர்ந்து சாப்பிடும் முல்லையின் காதில் விழுமாறு பேசினாள்.
மாலையில் ராயன் முல்லையை அழைத்து வரச் சென்றிருந்தான். நதியா பஸ் ஸ்டாப்பில் நின்றுக் கொண்டிருந்தாள் மழை தூறல் போட ஆரம்பித்தது. அவள் போக வேண்டிய பஸ் வரவில்லை. நிழற்குடையில் நிறைய பேர் நின்றிருக்க மழையும் வேகமாக வந்துவிட்டது. யாரிடமோ போனில் பேசினான். அடுத்த சில நிமிடங்களில் நதியாவின் பக்கத்தில் குடையில்லாமல் நின்றிருந்தவர்களுக்கு “எங்க கம்பெனி எம்.டிக்கு கல்யாண நாள் கொஞ்ச பேருக்கு கிஃபிட்டா குடை கொடுக்குறோம்” என்று குடையை கொடுத்துக்கொண்டிருந்தார்.
நதியாவுக்கு தெரியும் இது அண்ணாவோட வேலைதான் என்று தன் மேல் கோபம் இருந்தாலும் பாசம் குறையவில்லையென்று அவளுக்கு கண்கள் கலங்கி “தேங்க்ஸ் அண்ணா” என முணகினாள்.
முல்லை காரில் ஏறியதும் ராயன் நதியாவை பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது நமக்கு என்ன வந்தது அண்ணனும் தங்கையும் உடனே சேர்ந்துடுவாங்க நம்மளைத்தான் டீலில் விட்டுடுவாங்க என்று சலித்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்துக் கொண்டாள்.
காரில் முல்லை ராயனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தாள். “என்ன” என்று அவன் புருவம் உயர்த்தவும் “ஒன்னுமில்லை” என்று தலையை ஆட்டினாள்.
மறுபடியும் ராயனை பார்த்தாள் காரை ஓரமாக நிறுத்தியவன் “என்ன புள்ள ஏதாவது வேணுமா?” என்றான் அழுத்தமாக.
“ஆமா புளிப்பா மாங்கா வேணும் வாங்கி தருவீங்களா?”
பழமுதிர்சோலை முன்னே காரை நிறுத்தியவன் ஒருகூடை நிறைய மாங்காயோடு வந்தான்.
“சும்மா பேச்சுக்கு கேட்டேன் மனுசன் இப்படியா ஒருகூடை வாங்கிட்டு வருவாங்க கோபத்தையும் பாசத்தையும் ஒரேமாதிரி காட்டினா எப்படி” என்ற மலைத்துப்போனாள் முல்லை.
மாங்காயை பின் சீட்டில் வைத்துவிட்டு டிரைவர் சீட்டுக்கு வந்தவன் “இன்னும் வேற வேணுமா?” என்றான் அவளது கண்களை பார்க்காமல். ராயனால் ஒரு கட்டத்துக்கு மேல கர்ப்பமாய் இருக்கும் காதல் மனைவியிடம் அவனது கோபத்தை காட்டமுடியவில்லை. எத்தனை நாள் முகம் பார்க்காமல் ஒரே அறைக்குள் இருப்பான். அவளின் விசும்பலை கேட்டு அவனின் இதயம் அதி வேகமாய் துடிக்கும்..! அழாதே புள்ள என்று அவளை தாவி அணைத்து தலையை வருட கைகள் தவிக்கும். காதலை உள்ளே வைத்து வெளியே கோப முகத்துடன் நடித்துக் கொண்டிருக்கிறான் ராயன்.
“ஆமா என் மச்சான்கிட்டயிருந்து முத்தம் வேணும் ரொம்ப நாள் ஆச்சு முத்தம் கொடுத்து வாங்கி கொடுங்க” என்றாள் தைரியத்தை வரவழைத்து.
“என் பொண்டாட்டி கூட சண்டைங்க நான் முத்தமெல்லாம் தரமாட்டேன்னு சொல்லிடுங்க” என்றான் அவனும் விடாப்பிடியாக.
“சரிங்க எனக்கு தரவேணாமுங்க அவரோட குழந்தை முத்தம் கேட்குது குழந்தைக்காவது முத்தம் கொடுப்பீங்களானு கேட்டுச் சொல்லுங்க” என்றாள் ராகமாக.
“என் குழந்தைக்கு முத்தம் கொடுப்பேன் ஆனா காருக்குள்ள கிடையாது வீட்டுக்கு போய் தருவேன்னு சொல்லிடுங்க” என்றான் கார் ஸ்டேரிங்கில் தாளம் போட்ட படியே.
“இப்பவே குழந்தை முத்தம் கேட்டு உதைக்குது” என்று நாக்கை கடித்துக்கொண்டாள்.
“என்ன” என்று அவளை முறைத்தான்.
“எனக்கு இப்ப முத்தம் வேணும் கொடுக்க முடியுமா முடியாதா மச்சான்?” என்றாள் வெட்கத்தை விட்டு.
“கொடுக்க முடியாதுடி” என்று முகத்தில் அடித்தாற் போல பேசி காரை எடுத்தான். அவள் துவண்டு போகவில்லை.
“மாசமா இருக்க பொண்ணு ஆசைப்பட்டதை கொடுத்துடணுமாம் இல்லைனா பொறக்கப்போற குழந்தைக்கு காதுல சீழ் வரும்னு பெரியவங்க சொல்லுவாங்க” என்று இதழை சுளித்தாள். ராயன் உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான்.
காரை விட்டு இறங்கியதும் மழை ஜோராக பெய்தது “ஏய் நில்லு புள்ள மழையில நனைஞ்சா ஜலதோசம் பிடிச்சிக்கும்” என்று காருக்குள் இருந்த குடையை எடுத்து மனைவிக்கு பிடித்தான்.
கோமளமோ வாசலுக்கு வந்தவர் “ம்க்கும் இவன் பொண்டாட்டிதாசன்” என்று முகத்தை திருப்பினார்.
ராயன் அவரை பொருட்டாக பார்க்கவில்லை. வீட்டுக்குள் வந்ததும் முல்லை “அச்சு அச்சு” என்று வயித்தை பிடித்துக்கொண்டு தும்மினாள்.
“தலையை துவட்டு கண்ணு இஞ்சியை தட்டிப்போட்டு சூடாக டீ கொண்டு வரேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றுவிட்டார். ராயனும் முல்லையும் கீழே உள்ள அறைக்குள் நுழைந்துக் கொண்டதும் துண்டை எடுத்து ராயனுக்கு கொடுத்தாள்.
ராயனோ “நீதான் நனைஞ்சு இருக்க தலையை துவட்டு” என்று அவளிடம் கொடுக்க அவளோ “துவட்டி விடுங்க மச்சான்” என்று கையை கட்டிக்கொண்டாள் அவனது விழிகளை பார்த்துக்கொண்டே காதலாக.
“என்னடி வம்பு பண்ணுறியா?”
“நான் வம்பு பண்ணத்தான் நினைக்குறேன் என் வீட்டுக்காரர் என் மேல கோபமா இருக்காரு நான் என்ன பண்றது நான் பண்ணிய தப்புக்கு இப்போகூட காலுல விழத்தயாரா இருக்கேன்” என்று அவனது காலில் பொசுக்கென விழுந்துவிட்டாள்.
“ஏய் புள்ள எதுக்கு குனியறவ வயித்துப்புள்ளைக்கு ஏதாவது ஆகிடுச்சுனா” என்று பதறி விட்டான் ராயன்.
“இப்போ உங்க புள்ள மேல மட்டும்தான் கரிசனம் என் மேல கிடையாது அப்படித்தானே நான் உங்க மாமா பொண்ணுனு தெரிஞ்சுதான் என் கழுத்துல தாலி கட்டியிருக்கீங்க. நான் ஒரு வேலைக்காரியா இருந்தா என்னை கல்யாணம் பண்ணியிருப்பீங்களானு சந்தேகம்தான்! உங்க தங்கச்சியை பாலாஜி அண்ணா திட்டியதும் உங்களுக்கு கோபம் வந்துச்சு அவ மழையில நனையுறானு குடை வாங்கிக்கொடுக்குறீங்க!
நதியா அக்கௌவுண்டல பணம் போட்டு விடுறீங்க எனக்கு என் புருசனை தவிர வேற யாரும் இல்லைங்க நான் சொல்ல வந்தததை ஒரு நிமிஷம் காது கொடுத்து கேட்க மாட்டேன்னு இருந்துட்டீங்க” என்றாள் இத்தனை நாள் பிடித்து வைத்திருந்த கோபத்தையெல்லாம் கொட்டினாள் மடை திறந்த வெள்ளம் போல.
“பேசி முடிச்சிட்டியா?” என்றான் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு.
“இன்னும் நிறை பேசுவேன் பாலாஜி அண்ணா உங்க தங்கச்சியை லவ் பண்ணவே இல்ல! உங்க தங்கச்சி தான் அண்ணா பின்னாடி லவ் பண்ணுறேன்னு அவருக்கு தொந்தரவு கொடுத்தா அண்ணன் உன் காதலை ஏத்துக்க முடியாது ராயனுக்கு என்னால துரோகம் பண்ண முடியாதுனு பொறுமையா எடுத்து சொன்னாரு நதியா அண்ணா சொல்லுவதை காது கொடுத்து கேட்கலை… மண்டபத்துல அவ அப்படி ஒரு கூத்து பண்ணுவானு எனக்கு தெரியாம போச்சு… மாசமா இருக்க என்னைய என்ன சொல்ல வரேன்னு நிதானம் இல்லாம என்னைய அடிச்சுட்டீங்க” என்று இத்தனை நாள் மனதில் உள்ளதை கொட்டி விட்டாள்.
அவன் அமைதியாக அவளையே பார்த்திருக்க எங்கே தன் மேல் கோபம் கொண்டு இன்னும் பேசாமல் இருந்து விடுவானோ என்று பயம் வந்தது முல்லைக்கு.
“நீ என் மாமா பொண்ணுகிறதால மட்டும் கல்யாணம் பண்ணல. சும்மா மொசக்குட்டி போல துறுதுறுவென சுற்றித்திரியும் புள்ள மேல ஆசைப்பட்டேன்டி வருசா வருசம் தீபாவளிக்கு நானே கடைகடையா ஏறி இறங்கி உன் எலுமிச்சை நிறத்துக்கு ஏத்தபடி தாவணி பாவாடை ஆகட்டும் சுடிதாராகட்டும் எடுத்து தருவேன்டி. எனக்கு வயசாகிடுச்சு சின்னப் பொண்ணு மேல ஆசைப்படுவது தவறோனு என் ஆசையை கட்டுப்படுத்திப்பேன்டி உன்னை எவ்ளோ பிடிக்கும்னு கேட்டா சொல்லத்தெரியாது. ஆனா ரொம்ப பிடிக்கும் என்னோட உயிர் போறதா இருந்தா உன் மடியிலதான் போகணும்டி உன் மேல ரொம்ப நாளைக்கு என்னால கோபத்தோட இருக்க முடியலையேடி என்னை என்ன வசியம் பண்ணி வச்சிருக்க” என்றான் உயிர் உருகும் குரலில்.
“இப்படிபட்ட மனுசன்கிட்ட உண்மையை மறைச்சது ரொம்ப தப்பு மச்சான்” என்று அவனது நெஞ்சில் சாய்ந்து குலுங்கினாள்.
“ஏய் புள்ள அழாதே என் பாப்பாவுக்கு வலிக்கக் போகுது” என்று முல்லையை தூக்கி விட்டு அவளை அணைத்துக் கொண்டவன் “என் நண்பன் நதியா பாப்பாவுக்காக தன் மேல பழியை போட்டுக்கிட்டான்னு தெரியும். ஆனா அவன் என்கிட்டே முன்னமே நதியா அவன்கிட்ட லவ் சொன்னதை சொல்லி இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதே ..! என்கிட்ட உண்மையை மறைச்சுட்டான் அதான் இன்னமும் பேசாம இருக்கேன். என்னவா இருந்தாலும் காலையில நதியாவை அவன் பொது இடத்துல வைத்து திட்டி இருக்க கூடாது. எங்க வீட்டுப் பொண்ணு கண்ணு கலங்கி நிற்குறதை பார்க்க முடியலடி” என்றான் ஆதங்கத்துடன்.
“என் மச்சான் ரொம்ப நல்லவரு” என்று அவனை அணைத்துக்கொண்டாள்.
“ரொம்ப நேரம் வயிறு அழுந்த கூடாதுடி பாப்பாவுக்கு வலிக்கும்ல” என்று அவளை மெதுவாய் விலக்கி விட்டான்.
“பையன்னு சொல்லு மச்சான் எனக்கு உன்னை போலவே எல்லாருக்கும் பாதுகாப்பு கவசமா இருக்கற மாதிரி மகன் வேணும்” என்றாள் குழைவான குரலில் அவனது சட்டை பட்டனை திருகிக்கொண்டு.
“முதல்ல பொண்ணை பெத்துக்கொடு அப்புறம் பையனை பெத்துக்கொடுடி” என்று அவளது நெற்றியில் முட்டினான்.
“முல்லை” என தையல்நாயகியின் குரல் கேட்கவும்
“அச்சோ அத்தை வந்துட்டாங்க மச்சான்” என்று இருவரும் பிரிந்து நின்றனர்.
“கண்ணு இந்த டீயை குடி குளிருக்கு இதமா இருக்கும்” என்று மருமகளின் கையில் கொடுத்தார்.
“தேங்க்ஸ் அத்தை” என்று அவளின் முகத்திலிருந்த புன்னகையே கூறியது மகனும் மருமகளும் பிணக்கு முடிந்து இணக்கமாகிவிட்டனர் என்று நிம்மதியானார் நாயகி.
“பச்சத்தண்ணி ஊத்திடாதே காய்ச்சல் வந்துடும் சுடுதண்ணியில குளி கண்ணு” என்று மருமகளிடம் பாசமாய் பேசி விட்டு வெளியேறினார் தையல்நாயகி.
“குளிப்போமா புள்ள!” என்றான் கண்ணைச் சிமிட்டி ராயன்
Nice epi super
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis
Next episode please…super