அத்தியாயம் 32
பாத்திரங்களை சுத்தம் செய்து வந்தவளிடம் “என்ன இது எப்போ ராயன்கிட்ட பணம் கேட்ட என்னை அவமானப்படுத்துறதே உனக்கு வேலையா போச்சு டி” என்று தன்னிடம் உண்மையை மறைத்து விட்டாளென்று கன்னத்தில் அடித்து விட்டான்.
“என்னை சும்மா சும்மா அடிக்குறீங்க என்னை அடிச்சா யாரும் வரமாட்டாங்கனுதானே அடிக்குறீங்க” என்று இதழ் பிதுக்கி அழ ஆரம்பித்தாள் நதியா.
பாலாஜிக்கு அவள் அழுததும் ஒருமாதிரி ஆகிவிட்டது. அதுவும் எனக்கு யாரும் இல்லைனு அடிக்குறீங்களா என்ற கேவலை கண்டதும் அவளது கையை பிடித்து இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவள் கோமளம் போல குள்ளம் கொஞ்சம் பப்ளிமாஸ் போலவும் இருப்பாள்.
“ஏய் உருண்டை அழாதடி” என்று அவளது முதுகை வருடிக்கொடுத்தான்.
நதியாவின் கையை பிடித்திருக்கிறான் இப்படி மென்மையாக பிடித்ததும் கிடையாது. ஏய், ஏன்டி, நதியா என்று கன்னா பின்னாவென்று பேசுபவன் இன்று உருண்டை என்று புதியதாய் வார்த்தையை போட்டு கூப்பிட்டிருந்தான்.
அவனது நெஞ்சில் சாய எப்போது நேரம் வரும் என்று காத்திருந்தவளுக்கு ஜாக்பாட் அடித்தது அவளை அணைத்துக்கொண்டது. அவளுக்கு சில்லென்று பனிமழையில் நின்றது போல இருந்தது. காலத்திற்கும் என்னை தொடமாட்டானா கொஞ்சமாட்டானா என்று தவம் கிடந்தவளுக்கு இன்று ஏதோ தான் செய்த தவத்துக்கு பலன் கிடைத்ததை போல இருந்தது அவனது அணைப்பு. அவளுமே அவனை இறுக அணைத்துக்கொண்டாள். இருவரும் அப்படியே நின்றுக் கொண்டிருந்தனர். அவனது தலை வருடுவது நின்றதும் தலையை நிமிர்த்தி அவனது முகத்தை அப்பாவியாய் பார்த்தாள்.
“போடி படுத்து தூங்கு” என்று அவளை விட்டு விலகினான்.
“இப்படியா காட்டுமிராண்டி போல அடிப்பாங்க கன்னம் இன்னும் எரியுது” என கன்னத்தை தடவிக்கொண்டு அவனை முறைத்தாள்.
“ரொம்ப பண்ணாதடி மூனு மணிக்கு எழும்பணும்” என்று அவளது முதுகில் கை வைத்து தள்ளிக் கொண்டு அறைக்குள் தள்ளி விட்டு சமையல்கட்டுக்குச் சென்று ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டியை கண்ணாடி பவுலில் எடுத்து வந்தவன் மெத்தையில் கன்னத்தை பிடித்துக்கொண்டு படுத்திருந்தவளை “எழும்பி உட்காருடி” என்றான் சிறு அதட்டத்துடன்.
அவளோ எழும்பலைனாலும் திட்டுவாரு என்று கன்னத்தை பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
அவளது பக்கம் உட்கார்ந்து ஐஸ்கட்டியை அவளது கன்னத்தில் சிவந்த இடத்தில் ஒத்தடம் போல வைத்து வைத்து எடுத்தவன் “கல்யாணம் முடிச்சு மூனு நாளுல உன் அண்ணன் கம்பெனி ஆளு மூலம் உன் போனை கொடுத்துவிட்டான்ல அப்பவே போன் வேணாம்னு திருப்பி அனுப்பி வச்சிருக்கணும் பாவம் பார்த்து உனக்கு போனை வாங்கிக்கொடுத்தேன் பாரு என்னை செருப்பால அடிக்கணும்” என்று தன்னையே திட்டிக்கொண்டான் பாலாஜி.
“ஆஆ வலிக்குது”
“ரொம்ப ஓவரா பண்ணாதே எனக்கு வர கோபத்துக்கு கடிச்சு வச்சிருவேன்”
“ம்க்கும் கடிச்சிட்டாலும்” என்று முணகியதும்
“என்ன சொன்ன” என்றான் வேகமாக.
“இப்போ வலிக்கலனு சொன்னேன்” என்று இதழை சுளித்தாள்.
“உதட்டை சுளிக்காதடி” அவளது உதட்டை விரலில் சுண்டி விட்டான்.
“போடா வலிக்குது” என்று அவனது கையை தட்டிவிடவும் பவுலில் இருந்த ஐஸ்கட்டியெல்லாம் அவளது ஆடைகளுக்குள் போய்விட்டது.
“ஆஆ ஜில்லுனு இருக்கு” மெத்தையில் குதித்தாள். நைட்டி மட்டும் போட்டிருக்க அவளது அழகுகள் கதை படித்தது.
“ஏய் எதுக்குடி இப்படி ஜங்கு ஜங்குனு குதிக்கற அறிவு இல்லையாடி” என்று அவளது கையை பிடித்து உட்கார வைத்ததும்
“உங்க பனியன்குள்ள ஐஸ்கட்டியை போட்டா இப்படித்தான் நீங்களும் குதிப்பீங்க இருங்க வரேன்” என்று மெத்தையிலிருந்து வேகமாக இறங்கி சமையல்கட்டுக்குச் சென்று ஃபிரிட்ஜிலிருந்து ஐஸ்கட்டியை எடுத்து வந்தவளை பார்த்து “என்ன பண்ணுற லூசு?” என்று கேட்கும் நேரத்திற்குள் அவனது பனியனுக்குள் ஐஸ்கட்டியை போட்டுவிட்டாள்.
“ஏய் லூசு உருண்டை என்னடி பண்ணுற?” என்று அவனது பனியனுக்குள் இருந்த ஐஸ்கட்டியை எடுத்து அவளது நைட்டிக்குள் போட்டு விட்டான்.
அவள் “ஸ்ஆஆ குளிருது” என்று குதிக்க இவன் அவளை தூக்கி மெத்தையில் போட்டு “தூங்குடி வானரமே” என்று அவளது முகத்தருகே நெருக்கமாக தன் முகத்தை கொண்டுச் சென்றான்.
அவளோ அவனது முக நெருக்கத்தில் மூச்சடைத்துப்போனாள். இருவரும் முதல் முறை மோகத்துடன் பார்த்துக்கொண்டனர். கண்கள் நான்கும் காதல் கதை பேசியது. முதலில் அவன் தான் சுதாரித்தது. அடுத்த நொடி அவள் மேலிருந்து விலகி அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
“இப்போ எதுக்கு முதுகை திருப்பி படுத்துக்கிட்டீங்க என் பக்கம் பார்த்தா என்னை கட்டிபிடிச்சு ஃபர்ஸ்ட் நைட் நடந்துரும்னு உங்களுக்கு பயம் அப்படித்தானே?” என்றாள் மூக்கு விடைக்கும் கோபத்தில்.
அவள் புறம் திரும்பியவன் “ஆமா அப்படியே இவ பெரிய ரதி இவ மேல ஆசைப்பட்டு கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்து அப்படியே உன் மேல பாயத்தோணுது” என்றான் தோரணையாக.
“நேத்து காலையில நான் வாசல் பெருக்கி கோலம் போடும்போது நீங்க என்னை சைட் அடிச்சீங்க இல்லைனு மட்டும் சொல்லாதீங்க பாலாஜி! என் கூட எட்ட நின்னு பார்த்து குடும்பம் நடத்த போறீங்களா!” என மூச்சு வாங்க பேசினாள்.
அவன் அவளையே உற்றுபார்த்திருந்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. அவனிடம் பதில் இல்லை. ஏன் அவளை அவனும் விரும்புகிறான். விரும்ப வைத்துவிட்டாள் நதியா.
“நான் என்ன கொலைக்குத்தமா பண்ணிட்டேன் என்னை விலக்கி வச்சிருக்கீங்க. உங்க மேல ஆசைப்பட்டேன் அது ஒரு குத்தமா! எல்லாரும் என் அண்ணன் காதலுக்கு எதிரி இல்லனு சொல்லுறீங்க. அண்ணாகிட்ட சொல்லியிருந்தா கல்யாணம் பண்ணி வச்சிருப்பாருனும் சொல்றாங்க…அம்மாவுக்கு உங்களை அறவே பிடிக்காது பார்த்தாவே வெறுப்பா பேசுவாங்க. அப்படியிருக்க நான் அண்ணாகிட்ட போய் எனக்கு பாலாஜியை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்கவா முடியும்… அண்ணாவும் அம்மாகிட்ட நம்ம லவ் பத்தி சொல்லுவாங்க.
ஆனா அம்மா கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டாங்க அண்ணாவுக்கு என்னால சிரமம் வேணாம்னுதான் நான் மண்டபத்துல அப்படி பண்ணிட்டேன். இப்போதான் நான் பண்ணியது எவ்வளவு பெரிய தவறுனு புரியுது. எனக்கு நீங்க கிடைக்கணும் அவ்ளோதான் அப்போதைக்கு என் மூளைக்கு தோணுச்சு. அப்ப எதுவும் புரியலைங்க வெட்கத்தை விட்டு சொல்லுறேன் நான் உங்களோட சேரணும் எனக்கு உங்களை போல குண்டு குண்டு கண்ணோட குழந்தை பிறக்கணும்” என்று தாவி அவனை அணைத்துக்கொண்டாள்.
அவனோ அவளை அணைக்கவில்லை அப்படியே அமர்ந்திருந்தான். அவளோ அவனிடமிருந்து விலகி அவன் தன்னை அணைக்கவில்லையென்ற கோபத்தில் “நீங்களும் என்னை விரும்பறீங்கனு எனக்கு தெரியும் பாலாஜி… எனக்கு புரியுது நீங்க அண்ணனுக்கு துரோகம் பண்ணிட்டீங்கனு என்கிட்ட வர யோசிக்குறீங்க அதுக்காக அதையே இழுத்து பிடிச்சு இருக்க முடியுமா..?” என்று அங்கலாய்த்தவள் அவன் அமைதியாக அவளது முகத்தை பார்த்திருக்க அவளாக தொடர்ந்து “நீங்களா வந்து என்னை கட்டிபிடிக்காம நான் உங்க நிழலைக்கூட தொடமாட்டேன்” என்ற கோபம் வந்து மெத்தையில் படுத்துக்கொண்டவளுக்கு அழுகைதான் வந்தது. அழுதபடியே உறங்கியும் விட்டாள்.
அடுத்த நாள் காலையில் பாலாஜி எழுந்த போது அவள் எழும்பவில்லை மணியை பார்த்தான் நாலு ஆகியிருக்க “அச்சோ நேரம் ஆச்சே ஐஞ்சு மணிக்கு எல்லாம் பால்காரவங்க வந்துடுவாங்க” என்று அடித்து பிடித்து எழுந்து பால் கறக்கச் சென்றான்.
அவனுக்கு உதவியாக பாட்டியின் பேரன் கோவிந்தனை காலை மாலை பால் கறக்க மட்டும் வரச்சொல்லியிருந்தான். கட்டுத்தரைக்கு போகும்போது கோவிந்தன் பால் கறந்துக் கொண்டிருந்தான். அவசரமாக பைப்பில் தண்ணீரை பிடித்து முகம் கழுவிவிட்டு பால் சொம்பை எடுத்துக்கொண்டு மாட்டு பக்கம் சென்றவன் மாட்டை தடவி கொடுத்து பால் கறக்க ஆரம்பித்தான் பாலாஜி.
“என்ன அண்ணா எப்பவும் எனக்கு முன்னே வந்து பால் கறந்துட்டிருப்பீங்க என்னாச்சு உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்றான் கோவிந்தன்.
“இல்லடா நைட் உங்க அக்காகூட சின்ன சண்டைபோட்டேன் தூங்கறதுக்கு கொஞ்சம் லேட்டாகி எழும்ப நேரம் ஆச்சு” என்றான் சின்னசிரிப்புடன்.
“நான் நம்பிட்டேன் அண்ணா அக்கா உங்க மேல பிரியமா இருக்காங்க அவங்க கூட சண்டைபோட்டீங்கனு சும்மா சொல்லாதீங்க நானும் காலேஜ் போறேனல் எனக்கும் எல்லாம் தெரியும்” என்று அவன் வெட்கப்பட்டு சிரித்தான்.
“அடேய் இப்பதான் மீசை முளைச்சிருக்கு வயசுக்கு மீறி பேசாதடா” என்று அவனை செல்லமாய் திட்டிக்கொண்டே பாத்திரத்தில் கறந்த இருந்த பாலை கேனில் ஊற்றினான்.
எப்போதும் தன்னுடன் எழுந்து வாசல் தெளிப்பவள் இன்னும் தூங்குறாளே நைட் அடிச்சதுல இன்னும் கோபம் போகலை போலயே என்ற யோசனையும் பால்காரர்களுக்கு பாலை ஊற்றி கணக்கு நோட்டில் எழுதி வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றான்.
நதியா இன்னும் அறையைவிட்டு எழுந்து வரவேயில்லை. “ஓ மேடம்க்கு இன்னும் கோபம் போகலை போலயே இப்ப சமாதானம் பண்ண மாட்டேன் போடி” என்று மாட்டுக்கு தீவனம் வாங்குவதற்கு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான் பாலாஜி.
முல்லைக்கு ஏழு மாதங்கள் ஆகியிருக்க வளைகாப்பு போடுவதை பற்றி அழகம்மை பேச்சு எடுத்தார். தெய்வநாயகமும் “நானும் வீட்டு பெண்கள் கிட்ட பேசணும்னு இருந்தேன் நீயே பேச்சை துவங்கிட்ட அழகு வர புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு அப்பவே வளைகாப்பை வச்சிடலாம்” என்றார்.
தன்னிடம் வளைகாப்பை பற்றி முதலில் கேட்கவில்லை என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தார் கோளம்.
“அண்ணி நீங்க என்ன எதுவும் பதில் சொல்லாம இருக்கீங்க?” என்றார் தெய்வநாயகம்.
“அதான் உங்க தங்கச்சிகிட்ட கேட்டுட்டீங்களே என்கிட்ட தனியா என்ன கேட்க வேண்டி கிடக்கு பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லுவாங்க வளைகாப்பை புதன்கிழமை வச்சிக்கலாம். ஆனா வளைகாப்பு போட்டு புள்ளையை அவங்க தாய் வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்க முல்லையை எந்த வீட்டுக்கு அனுப்ப போறீங்க?” என்றார் வெடுக்கென.
“என் பொண்டாட்டிக்கு தாய் வீடும் புகுந்த வீடும் இதுதான் பெரியம்மா!” என்று கைக்காப்பை ஏத்தி விட்டுக்கொண்டு அங்கே வந்தான் ராயன்.
“வந்துட்டான் இனி எதுவும் அத்தையால பேச முடியாது” என்று முகத்தை திருப்பினாள் தீபா.
நீலகண்டனோ “முல்லைக்கு தாய் வீடு இல்லைனு யார் சொன்னாங்க அக்கா… நாங்க கட்டி வச்ச வீடு சும்மாதான் கிடக்கு. முல்லையை நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம்” என்று அழகம்மையை பார்த்தார் நீலகண்டன்.
“நான் மனசுல நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்க” என்றார் வாய்கொள்ளா புன்னகையுடன் அழகம்மை.
அமுதா அழகம்மைக்கு கண்களால் நன்றி கூறினார். அவரோ இருக்கட்டும்டி என்று கண்ணைச்சிமிட்டினார்.
ராயன் பக்கத்தில் வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றிருந்த முல்லைக்கு வளைகாப்பிற்கு தன் நண்பி நதியாவை கூப்பிடணும் அவள் தனக்கு வளையல் போட்டு விடணும் என்ற ஆசையும் இருந்தது. தன் ஆசையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
ராஜமாணிக்கத்தை வீட்டை விட்டு விரட்டியதும் முதல் வேலையாக பூங்கொடியை அழைத்துச் சென்றுவிட்டான் தென்னரசு.
“நம்ம சொந்தபந்தங்களுக்கு வளைகாப்பு அழைப்பு சொல்ல ஆரம்பிச்சிடலாம்” என்றார் சந்தோசமாக தையல்நாயகி.
அழகம்மையோ “ராயா ஆண் வாரிசு மனைவிக்கு சீமந்தம் நடக்குது உன் தங்கச்சி நதியா இல்லாம சபை நிறையாது உன் கோபத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு அவளுக்கு முதல் அழைப்பு கொடு” என்றார் கோமளத்தை ஓரப்பார்வையால் பார்த்தபடியே.
“அந்த ஓடுகாலி வந்தானா நான் வளைகாப்புக்கு வரல” என்று முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டார்.
“பெரியம்மா எத்தனை நாளு நதியா மேல கோபமா இருக்கறது போல நடிப்பீங்க..! நேத்து நைட் உங்க அறையை தாண்டி போகும்போது நதியோட போட்டோவை வச்சு பார்த்துட்டு இருந்தீங்க அதை நான் கவனிச்சேன் பாப்பாவை நாம மன்னிச்சு ஏத்துக்கலாம்… இத்தனை பேர் சொந்தம் இருந்தும் நம்ம வீட்டுப் பொண்ணு அனாதை போல இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏதோ சின்னப் பொண்ணு தவறு பண்ணிட்டா நாம பெரியவங்க மன்னிச்சு ஏத்துக்கணும்..! பாலாஜியும் இப்ப அவனாக காலூன்றி இருபது மாடுகளுக்கு மேல வச்சு பண்ணையம் நடத்துறான் நாம அவனுக்கு கைகொடுத்து தூக்கிவிடுவோம் நம்ம வீட்டு புள்ளை கஷ்டப்படறது என்னால பார்க்க முடியலை பெரியம்மா தப்பு பண்ணியவளை அப்படியே தண்ணி தெளிச்சு விடமுடியுமா சொல்லுங்க” என்றான் ராயன் ஆயாசமாக.
கோமளம் எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குச் சென்று விட்டார்.
அழகம்மையோ “அண்ணி பேசாம அமைதியா போறாங்கனா நதியாவை கூப்பிடுனு அர்த்தம் ராயா உன்னை தவிர இந்த வீட்ல யார் பேசினாலும் அண்ணி மசிய மாட்டாங்க” என்றார் புன்சிரிப்புடன்.
“சரிங்க அத்தை பெரியவங்க எல்லாரும் புறப்பட்டு இருங்க போகலாம் நானும் கிளம்பி வரேன்” என்று அறைக்குள் சென்றுவிட்டான்.
தீபாவோ ஆளுக்கு முன்னே புறப்பட்டு நின்றாள் கழுத்து நிறைய நகைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு.
சட்டைக்கு பட்டன் போட்டுக்கொண்டிருந்தவன் முன்னே நின்ற முல்லையோ “மச்சான் நானும் நதியாவை பார்க்க வரட்டுமா?” என்றாள் அவனது சட்டை பட்டனை திருக்கொண்டே.
“நான் வேணாம்னு சொன்னா இங்கயே இருந்துடப்போறியா அதான் ரெடியாகி இருக்கியே வா போகலாம்” என்றவனோ கதவை பார்த்தான் கொஞ்சமாய் சாத்தியிருக்க அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து “அழகா இருக்கடி” என்று அவளது இதழில் பட்டும் படாமலும் முத்தமிட்டான்.
அவளோ “அய்யே இப்படித்தான் முத்தம் கொடுப்பீங்களா!” என்று கண்ணைசுருக்கி தலையை சாய்த்தாள்.
“மாசமா இருக்க புள்ளையை கஷ்டப்படுத்தக்கூடாதுனு பார்த்தேன்டி நான் அழுத்தமா கொடுத்தா தாங்கமாட்ட புள்ளை பிறக்கட்டும் அப்புறம் வச்சிக்குறேன் இருந்தாலும் நீ கேட்ட முத்தத்தை நான் கொடுக்காம இருப்பேனா” என்று அவளிதழில் முத்தக் கவிதை எழுதினான்.
“முல்லை” என்று தையல்நாயகியின் குரல் கேட்கவும் அவசரமாய் இருவரும் பிரிந்து “சேலையை சரிபண்ணுடி” என்றவனோ அவனாகவே அவளது களைந்த சேலையை சரிசெய்தான்.
“ஆஆ மெதுவா மச்சான்” என்றாள் சிணுங்கலாக.
“ஆசையா இருக்குடி” என்று அவளை ஒரு முறை அணைத்துவிட்டு “இதோ வரோம்மா” என்று அறையிலிருந்து குரல் கொடுத்ததும் “அண்ணா உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணுறோம்” என்றான் கண்ணன் குறும்பாக.
“மானத்தை வாங்குறான் உன் கொழுந்தன்” என்று கலைந்த கேசத்தை சரிசெய்து அறையை விட்டு வெளியே வந்தனர்.
ராயன் பின்னால் வயிற்றை பிடித்துக்கொண்டு தேர் போல நடந்து வந்தவளை பார்த்து
பொறாமையில் பொங்கினாள் தீபா. ‘இவ எந்த மேக்கப்பும் போடறது இல்லை மினுமினு மின்னுறா’ என்று புகைந்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அண்ணன் தங்கை வீட்டுக்கு வருவது தெரியாமல் இன்னும் காய்ச்சலில் அனத்திக்கொண்டிருந்தாள் நதியா.
மாட்டுக்கு தீவனம் வாங்கிக் கொண்டு வந்தவன் இன்னும் தூங்குறாளா காலேஜ் லீவு விட்டாப்போதுமே தூக்கம் தான் அவளுக்கு பிரதானம் என்று மனைவியை கடிந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவன் அறையில் இன்னும் உறங்குவதை கண்டு கொஞ்சம் பதட்டம் வந்தது பாலாஜிக்கு.
“அம்மு” என்று நதியாவின் கையை தொட்டான். அனலாக கொதிக்கவும் “அம்மு என்னடி பண்ணுது?” என்று அவள் பக்கம் உட்கார்ந்து கழுத்தில் கையை வைத்தான். அவளோ அவனது கைச்சூட்டில் அவனது கையை நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டாள். மணி எட்டாகியிருந்தது.
இப்படி காய்ச்சல் வந்தது கூட தெரியாமல் இருந்திருக்கேனே என்று தன் மேல் கோபப்பட்டுக்கொண்டவன் “இருடி அம்மு கஞ்சி வைச்சு குடிச்சுட்டு ஹாஸ்பிட்டல் போலாம்” என்று அவசரமாக சமையல்கட்டுக்குச் சென்றவன் அரிசியை லேசாக வறுத்து மிக்சியில் பொடி செய்து கஞ்சியை வைத்து ஹாலில் ஃபேனை போட்டு ஆற வைத்து பெட்ரூம்க்கு வந்தவன் அனத்திக்கொண்டிருந்தவளை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் அழைத்துச் சென்று முகம் கழுவி ஃபிரெஷ் பண்ண வைத்தான்.
“முடியல மாமா” என்றவளை நெஞ்சோடு அணைத்து தூக்கியவன் “இதுக்குத்தான் ரொம்ப கோபப்பட்ட ஆடக்கூடாது” என்று அவளை கொஞ்சமாய் கடிந்துக் கொண்டு ஹாலுக்கு தூக்கி வந்தவன் துண்டால் அவளது முகத்தை துடைத்து சோபாவில் உட்கார்ந்து அவளை நெஞ்சோடு சாய்ந்து வைத்து கஞ்சியை குடிக்க வைத்தான்.
“எனக்கு வாயெல்லாம் கசக்குது மாமா கஞ்சி வேணாம்” என்று அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.
“ஏய் இப்ப கஞ்சியை குடிச்சாத்தான் தெம்பா இருக்கும் வம்பு பண்ணாத குடிடி” என்றான் கெஞ்சலாக.
அவனது முகத்தை வலியோடு பார்த்தவள் “இப்ப மட்டும் கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் வரும் நேத்து நீங்கதானே என் நைட்டிக்குள்ள ஐஸ்கட்டியை போட்டு விளையாடினீங்க அதான் காய்ச்சல் வந்துருச்சு காய்ச்சல் வந்தகாட்டிதான் என்னை நெஞ்சோடு அணைச்சு பிடிச்சிருக்கீங்க ஒரு சமயம் பாசமா இருந்துட்டு பல சமயம் எரிஞ்சு விழுந்தா எப்படி… எப்போ என்னை மனைவியா நடத்துவீங்க மாமா?” என்றாள் ஆயாசமாக வலி நிறைந்த குரலில்.
“இப்போ இந்த கஞ்சியை குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் போற வழிய பார்க்கணும் பொண்டாட்டியை நினைக்காமதான் உன்னை நெஞ்சுல சாய்ச்சு வச்சிருக்கேனா இப்ப குடிக்கலைனா நேத்து நைட் ஒரு கன்னம் பழுத்தது போல இன்னொரு கன்னமும் பழுத்திடும் பார்த்துக்கோ” என்று அவன் பொறுமை இழந்து பேசவும் அவளோ அவனது கோபத்தை தாங்கமாட்டாமல் “என் பக்கம் யாருமே இல்லைனுதானே எப்போ பாரு திட்டிக்கிட்டே இருக்கீங்க என் அண்ணாவுக்கு ஒரு போன் போட்டு சொன்னேன்னா உங்க கன்னம் பழுத்துரும் தெரியும்ல” என்றாள் விசும்பிக்கொண்டே.
“ஏய் என்னை கோப்படுத்தாடி இத்தனை காய்ச்சல் அடிக்குது அப்பவும் வாய் ஓயுது பாரு ஒழுங்கா கஞ்சியை குடி” என்று கையை ஓங்கவும் ராயன் குடும்பத்தோடு வந்து நின்றவன்
“டேய் மடையா என்னடா பண்ணுற கையை கீழ இறக்குடா என் முன்னால என் தங்கச்சியை அடிக்குறியா?” என்று பல்லைக்கடித்தான்.
பாலாஜியின் நெஞ்சில் சாய்ந்திருந்த நதியாவோ ராயனின் குரல் கேட்டதும் “அண்ணா” என்று தாவி ராயனை அணைத்துக்கொண்டு “இப்பதான் இந்த தங்கச்சியை பார்க்கணும்னு உனக்கு தோணுச்சா..? நான் சின்னப் பொண்ணுதானே தப்பு பண்ணியிருந்தா மன்னிக்கமாட்டீங்களா இவன் என்னை நேத்து அடிச்சிட்டான் நீ… நீங்க ஒரு அறை அடிங்க அண்ணா” என்றாள் சிறுபிள்ளை போல தேம்பிக்கொண்டு.
ராயனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அழகம்மையோ “என்னடி பேச்சு இது நாங்க வீட்டுக்குள் வரும் போது உன் புருசன் நெஞ்சுல சாய்ஞ்சு பாலாஜி கிட்ட சண்டை போட்ட இப்ப என்னடானா ராயனை பார்த்ததும் புகார் பண்ணுறியா. குழந்தை எடுப்பார் இருந்தா எக்கி எக்கி அழுகுமாம் எங்களை பார்த்ததும் உன்னை குழந்தை போல பார்த்துக்கிட்ட பாலாஜி அடிக்க சொல்லுறியா?” என்று அவர் செல்லமாக அதட்டவும்
“போங்க உங்க மகனை பத்தி உங்களுக்கு தெரியலை” என்று முகத்தை வெட்டினாள்.
நதியாவின் உடல் அனலாக கொதிப்பதை கண்ட ராயனோ “பாப்பா ஃபர்ஸ்ட் கஞ்சியை குடி” என்றான் சிறு கண்டிப்புடன்.
ராயனை கண்டதும் பாலாஜிக்கு நெஞ்சுக்குள் சந்தோசம். பலநாள் கழித்து இருவரும் முகம் பார்த்துக்கொள்கிறார்கள்.
“கஞ்சியை கொடுடா” என்று எப்போதும் போல இயல்பாக பேசினான் பாலாஜியிடம்.
கஞ்சி டம்ளரை ராயனிடம் கொடுத்தவன் “எல்லாரும் உட்காருங்க” என்று பாயை விரித்து போட்டு நாற்காலியை எடுத்தும் போட்டான். தெய்வநாயகமும் நீலகண்டனும் சிறு புன்னகையுடன் உட்கார்ந்தனர் அனைவரும் இப்போது வருவார்களென்று பாலாஜி எதிர்பார்க்க வில்லை.
“என்னை எல்லாரும் மன்னிக்கணும் மண்டபத்துல அப்படியொரு காரியத்தை பண்ணிட்டேன்” என்றவனோ அடுத்த வார்த்தை வராமல் தலையை குனிந்துக் கொண்டான்.
“எனக்கு எல்லாம் தெரியும்டா நீ உன் மேல பழியை போட்டுக்காதே! நீ என் நண்பன்டா உனக்கு துரோகம் பண்ணத்தெரியாது என் குடும்பத்து பொண்ணுக்கு கெட்ட பேரு வரக்கூடாதுனு உன் மேல் பழியை போட்டுக்கிட்ட பாரு நீ தான் என் உயிர் நண்பன். உன்னைய விட என் தங்கச்சிக்கு பெஸ்ட் மாப்பிள்ளை தேடினாலும் கிடைக்கமாட்டான்டா” என்றான் உருக்கமான குரலில்.
“எனக்கு உன்னை விட்டா யாருடா இருக்காங்க” நண்பனின் கையை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான் பாலாஜி.
நதியாவோ “நான்தான் அண்ணா பாலாஜியை போன் பண்ணி நான் இருந்த அறைக்கு வரச்சொன்னேன் என் மேலதான் தப்பு” என்று அவள் அழுகவும்
“நடந்து முடிஞ்சதை பேசவேணாம் கஞ்சியை குடிச்சிட்டு ஹாஸ்பிட்டல் போய்ட்டு வாங்க” என்றார்கள் பெரியவர்கள்.
முல்லையோ “காய்ச்சலோட அழுகாதடி ரொம்ப உடம்பு முடியாம போயிடும்” என்றாள்.
கண்ணீரை துடைத்துக்கொண்ட நதியாவோ “நான் அழலடி எல்லாரும் என்னை பார்க்க வந்ததுல என் காய்ச்சல் பறந்து போனது போல இருக்கு” என்று கஞ்சியை குடிக்க ஆரம்பித்தாள்.
கண்ணன் “பாப்பா எழும்பு ஹாஸ்பிட்டல் போகலாம் இப்போ வர காய்ச்சலுக்கு உடனே இன்ஜக்சன் போட்டுக்கணும்” என்று கண்ணனும் தங்கை பக்கத்தில் வந்தான்.
“அண்ணா” என்று கண்ணனையும் அணைத்துக்கொண்டாள்.
“ஸப்பா இந்த பாசமலர் காட்சியை பார்க்க நான் வராம இருந்திருக்கலாம்” என்று பொருமிக்கொண்டாள் தீபா.
அழகம்மையோ “தீபா எல்லாருக்கும் டீ போட்டு கொண்டு வாமா” என்றார்.
“இந்த அம்மா எனக்கு வேலை வைக்குறதலேயே குறியா இருக்கும்” என்று சலம்பிக்கொண்டு டீ போடச் சென்றாள்.
சின்ன சமையல்அறைக்குள் டீ தூள், சர்க்கரை எல்லாம் ஈசியாய் தீபாவால் எடுக்க முடிந்தது. இங்க வந்து நான் இவங்களுக்கு வேலைக்காரி போல டீ போடணுமா என்று புலம்பிக்கொண்டு டீயை போட்டுக்கொண்டு வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் டீயை அனைவருக்கும் கொடுத்தாள் தீபா.
டீயை குடித்த பெரியவர்கள் “நதியா ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரும் வரை நாங்க இங்கயே இருக்கோம் போய்ட்டு வாங்க” என்றனர்.
பக்கத்தில் இருக்கும் க்ளீனிக்கிற்கு கூட்டிச்சென்றான் பாலாஜி. “101° ஃபீவர் இருக்கு. நாளைக்கும் காய்ச்சல் குறையாம இருந்துச்சுன்னா ப்ளட் செக்கப் பண்ணிக்கலாம் சுடுதண்ணி குடிங்க வெளியே போகாதீங்க” என்று இன்ஜக்ஷன் போட்டு மாத்திரையை எழுதிக்கொடுத்தார்.
மதியம் சமையல் செய்து வைத்திருந்தனர் ராயன் வீட்டு பெரியவர்கள்.
“எனக்கு தலைவலிக்குது அத்தை” என்று சமைக்க டிமிக்கி கொடுத்து நைசாக சோபாவில் உட்கார்ந்துக் கொண்டாள் தீபா.
மாடுகள் கட்டியிருக்கும் கட்டுத்தரைக்குச் சென்றவன் மாடுகளை பார்த்துவிட்டு வந்தான். காலியா இருக்கும் இடத்தில் இன்னும் பத்து மாடு வாங்கிப்போட்டு பிஸ்னஸை பெரிதாக்க சொல்லணும் பாலாஜிகிட்ட என்று யோசனையில் வீட்டுக்குள் வந்தான்.
நதியாவும் பாலாஜியும் வர நதியாவுக்கு சுடு தண்ணீர் கொடுத்து அவளுக்கு கஞ்சியை கொடுத்தார் தையல்நாயகி.
கஞ்சியை குடித்தவள் மாத்திரையை போட்டு படுத்துவிட்டாள். கோமளமோ வளைகாப்பு அழைப்பு சொல்ல போனவங்க இன்னுமா வராங்க என்று தீபாவிற்கு போன் போட்டார்.
தீபாவோ “அத்தை நதியாவுக்கு காய்ச்சல் அதான் எல்லாரும் இருந்துட்டோம் நாங்க வர நைட் ஆகிடும்” என்றாள்.
“என்ன காய்ச்சலா இப்போ ஏதோ மறுபடியும் கொரோனா பரவுதாமே நல்லாயிருக்காளா?” என்றார் தவிப்பாய்.
“சாதாரண காய்ச்சல்தான் அத்தை நான் வேணா இருந்து பார்த்துக்கட்டுமா?” என்று நல்ல மருமகளாக பேசினாள்.
“இல்ல நீ வீட்டுக்கு வந்துடு. அவ புருசனே பார்த்துப்பான்” என்றார் பெரும்மூச்சுடன்.
“புள்ள ரொம்ப வாடிப்போய்ட்டா அத்தை” என்றாள் நல்லகுடிநாச்சியாக.
“சரி நான் போனை வைக்குறேன்” என்று போனை வைத்த கோமளத்திற்கு இவளுக்கு ஊசினாவே பயந்து கிடப்பாளே எப்படி ஊசி போட்டுக்கிட்டாளோ என்று மகளை பற்றி கவலைப்பட்டார்.
பாலாஜி மாலையானதும் பால் கறக்கச் சென்றான். ராயனோ நண்பனுடன் சென்றவன் “நானும் பால் கறக்குறேன்டா” என்றவனோ பாலாஜிக்கு உதவி செய்தான்.
“டேய் நீ பெரிய பால்பண்ணைக்கு சொந்தக்காரன்டா நீ ஏன் இந்த வேலையை பார்க்குற சும்மா நில்லு” என்று நண்பனிடம் இயல்பாய் பேசினான்.
“நானும் உன்னை போல மாடு வாங்கி பால் கறந்து படி படிப்படியாக முன்னேறியவன்தான் டா மச்சான்” என்று அவனது தோளில் தட்டி பாலை கேனில் ஊற்றினான்.
வியாபாரிகள் பாலை வாங்கிக் கொண்டுச் சென்றதும் “டேய் என்னை மன்னிச்சிட்டல” என்றான் மீண்டும் ராயனின் கையை பிடித்துக்கொண்டு.
“நீ என் நண்பன்டா உன் மேல கோபம் வராது” என்று பாலாஜியை அணைத்துக்கொண்டான்.
“முல்லை வளைகாப்பு புதன்கிழமை வச்சிருக்கோம் நீயும் நதியாவும் வந்துடணும் உங்களுக்காக காத்திருப்பேன்” என்றான் சந்தோச சிரிப்புடன்.
“டேய் நான் வளைகாப்புக்கு வந்தா உங்க பெரியம்மாவுக்கு பிடிக்காதே” என்றவன் முகம் சுருண்டு போனது.
“பெரியம்மா உனக்கு அழைப்பு சொல்ல சொன்னாங்க” என அவன் தோளில் கையை போட்டுக்கொண்டான்.
“சரி வரேன்டா” என்றான் அரைமனதாகத்தான்.
“பாலாஜி என் தங்கச்சியை தள்ளி வைக்காதேடா அவ கூட வாழ ஆரம்பி” என்றான் இதழ் விரிப்புடன்.
“சரிடா” என்றான் வெட்க புன்னகையுடன் மாமனும் மச்சானும் சேர்ந்து விட்டனர்.
இரவு சமையல் சாப்பிட்டு முடித்தனர். நதியாவுக்கு தன் வீட்டு மக்களை பார்த்ததில் காய்ச்சல் சரியாகிவிட்டது. நாயகியோ “நான் நதியாவோட ஒருநாள் இருந்துட்டு வரேன்” என்று நதியாவுடன் இருந்துகொண்டார். அனைவரும் சந்தோசமாக கிளம்பினார்கள்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis
Next part when you will upload bro