ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 33

பூங்கொடி கல்யாணம் ஆன புதிதில் தென்னரசுவிடம் “இந்த வீட்ல மாமியார் இருந்துருக்கணும் அவங்களும் இல்ல… அட உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா அவ கூட பேசிட்டு இருந்திருக்கலாம்… நீங்க வெளியே போன பிறகு நான் இந்த டிவியையும் போனையும் எவ்ளோ நேரம் பார்க்குறது” என்று சலித்துக்கொள்வாள்.

குமுதாவோ பூங்கொடி தங்களை ஏற்றுக்கொள்வாளோ என்று தயங்கிக்கொண்டே பூங்கொடியிடம் பேசினார்.

ஆனால் பூங்கொடி குமுதாவையும் அரசியையும் அவர்களது உறவுமுறையை பற்றி கேட்கவில்லை “அத்தை தியாவை பார்த்துக்கோங்க நான் சமைச்சிடறேன்” என்று சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் “அண்ணி நீங்க மேக்ஸ்ல புலினு அண்ணா சொன்னாரு எனக்கு இந்த சம்க்கு ஆன்சர் வரலை கொஞ்சு சொல்லிக்கொடுங்க” என்று வந்து நின்ற அரசியிடம் அவளுக்கு புரியும்படி சம்மை போட்டுக்காட்டினாள் 
பூங்கொடி. 

தென்னரசுவோ ஆர்கானிக் காய்கறிகள் விளைவிப்பதில் இறங்கியிருந்தான். தோப்பு வீட்டை விட்டு வெளியே வரவில்லை ராஜமாணிக்கம். ஆனால் அவரிடம் பழி உணர்வு உயர்ந்துக் கொண்டே சென்றது. ராயன் குடும்பத்தை நிம்மதியிழக்கச் செய்வது எப்படி என்று இரவெல்லாம் தூங்காமல் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்.

நதியாவுக்கு காய்ச்சல் குறைந்திருந்தது நாயகியோ இட்லியும் காரமில்லா சாம்பாரும் வைத்து மகளுக்கு ஊட்டி விட மாடுகளுக்கு தீவனம் காட்டி வந்த பாலாஜியோ “எனக்கும் பசிக்குதுமா” என்று வந்து நதியாவின் பக்கம் உட்கார்ந்தான். 

நதியாவை திருமணம் செய்த பிறகுதானே நாயகிக்கு மருமகன் ஆனால் பாலாஜி ராயனின் நண்பனாக இருக்கும்போது நாயகியை அம்மா என்றுதானே கூப்பிடுவான். இப்போதும் நாயகி மருமகனாக பார்க்கவில்லை. 

“இருப்பா நதி பாப்பாவுக்கு ஊட்டி முடிச்சிட்டேன் உனக்கு வேற தட்டுல போட்டு எடுத்துட்டு வரேன்” என்று எழும்பியவரை “அம்மா எனக்கு கையில வைங்க நான் சாப்பிடறேன்” என்று கையை நீட்டினான் தாய்பாசத்திற்காக ஏங்கியவன் பாலாஜி.

அவரோ “நீ எனக்கு மகனும் கூடப்பா” என்றவரோ பாலாஜிக்கு கையில் இட்லியை வைத்தார். பாலாஜிக்கோ கண்ணீர் வந்துவிட்டது.

“காரமா இருக்காப்பா காரம் குறைவாத்தானே வச்சேன்” என்று நாயகி பதறினார்.

“இல்லம்மா நான் உங்க கையால மட்டும்தான் அடிக்கடி சாப்பிட்டிருக்கேன் அப்போவெல்லாம் உங்களை அம்மாவா நினைச்சுதான் சாப்பிட்டேன் இப்போ அப்படி நினைக்க முடியாதே” என்றான் ஏக்கத்துடன்.

“நான் உன்னை மகனாகத்தான் பார்க்குறேன்பா” என்றார் புன்சிரிப்புடன்.

“அம்மா நீங்க சாப்பிட்டு நதியாவோட படுத்துக்கோங்க நான் ஹாலுல படுத்துக்குறேன்” என்றவனோ நதியாவை பார்த்தான்.

பாலாஜி தாய் பாசத்துக்கு ஏங்கியது அவள் மனதில் வலியை கொடுத்தது. இனிமே நான் உங்களுக்கு தாயா இருந்து பார்த்துப்பேன் பாலாஜி நான் உங்களை காயப்படுத்திட்டே இருந்திருக்கேன் நான் ஒரு முட்டாள் என்று தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு வந்த அழகம்மையிடம் “என்ன காய்ச்சலாம் உன் மருமகளுக்கு நல்லாயிருக்காளா! இப்படித்தான் ஒன்னும் இல்லாதவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா அனாதை போல படுத்துக்கிடக்கணும்” என்றார் முகம் சுளித்து.

“அண்ணி நாமளா பார்த்து நதியாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தா கூட அந்த பையன் மாதிரி நதியாவுக்கு உடம்பு சரியில்லைனா பார்த்திருப்பாரானு தெரியலை ஆனா பாலாஜி தம்பி நதியாவை கண்ணுக்குள்ள வச்சி கவனிக்குது” என்றார் சந்தோசமாக.

“ம்க்கும் நீதான் அவனை மெச்சிக்ணும்” என்று முகத்தை தோளில் இடித்துச் சென்றார்.

கோமளத்தின் அறைக்குள் வந்த தீபாவோ “அத்தை நம்ம பரம்பரை நகையெல்லாம் உங்க பொறுப்புலதானே இருக்கு என்கிட்ட காட்டுவீங்களா பார்க்கணும்னு ஆசையா இருக்கு” என்றாள் நகைகள் இருந்த மரபீரோவை நோட்டமிட்டபடியே.

கோமளமோ”இரு காட்டுறேன்” என்று கதவை சாத்தி விட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த கொத்து சாவியை எடுத்து மரபீரோவை திறந்தார்.

கல்வைத்த நகைகள் தனி பாக்ஸிலும், கல் வைக்காத நகைகள் தனி பாக்ஸிலும், வைர நகைகள், முத்து என்று பாக்ஸ் பாக்ஸாக இருப்பதை கண்டு அதிசயமாக பார்த்தாள். அவளும் பணக்காரவீட்டுப்பெண்தானே ஆனால் இவ்ளோ நகைகள் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறாள்.

ஓவ்வொரு பாக்ஸாக எடுத்துக்காட்டவும் “அத்தை எனக்கு இந்த வைர அட்டிகை வேணும்… இந்த ஒட்டியாணம் வேணும் எனக்கு இந்த டிசைன் ரொம்ப நாளா தேடிக்கிட்ட இருந்தேன்” என்றவளோ வைர அட்டிகையை பார்த்ததோடு அல்லாமல் கழுத்தில் வேறு போட்டு “நல்லாயிருக்கா அத்தை?” என்று கண்கள் மின்னும் சிரிப்போடு சந்திரமுகி ஜோதிகா போல ஒரு நிமிடம் மாறினாள் தீபா.

“இந்த வைர அட்டிகை இந்த வீட்டு மூத்தவாரிசுக்கு கொடுக்கணும் தீபா அந்த நகையை வச்சிட்டு வேற வேணா எடுத்துக்கோ  என்னோட எல்லா நகையும் உனக்கு தான்” என்றார். நகை பணத்துக்கு ஆசைப்பட்டாலும் யார் யார்க்கு என்ன கொடுக்கணும் என்பதில் சரியாக இருந்தார் கோமளம். 

“அப்போ இந்த வைர அட்டிகை முல்லைக்குதானா எனக்கு இல்லையா அத்தை நானும் இந்த வீட்டு மருமகதானே எனக்கு ஆசையா இருக்கு” என்றவளுக்கு வைர அட்டிகையை விட்டு அவள் கண்கள் நகரவில்லை.

“வேணும்னா ராயன் கிட்ட கேளு கொடுத்தா வாங்கிக்கோ” என்று க்ளூ கொடுத்தார் கோமளம் மருமகளுக்கு.

“அப்படியா இப்போவே கேட்குறேன்” என்று அறையை திறந்துக் கொண்டு வெளியே சென்றாள்.

கோமளமோ “என் மருமக பிழைச்சுப்பா” என்று சந்தோஷப்பட்டார்.

ஹாலில் நீலகண்டன் தெய்வநாயகம் இருவரும் சாப்பிட்டு அமர்ந்திருந்தனர். ராயனும் முல்லையும் சாப்பிட்டு எழுந்து வந்தவர்கள் நீலகண்டன் பக்கம் முல்லையும் தெய்நாயகம் பக்கம் ராயனும் உட்கார்ந்துக் கொண்டனர்.

அழகம்மையோ “ராயா எங்க அம்மாவோட ஆசை தன் பேரன் பொண்டாட்டிக்குத்தான் அவங்க வைர அட்டிகையை கொடுக்கணும்னு முல்லை வளைகாப்பிற்கு நம்ம பரம்பரை வைர அட்டிகையை அவளுக்கு கொடுக்கணும்” என்றார் புன்னகையுடன்.

“சரிங்க அத்தை பெரியம்மாகிட்ட சொல்லுறேன்” என்றான் ராயன்.

வெளியே சென்றிருந்த கண்ணன் வீட்டுக்குள் வரவும் ராயன் முன்னே நின்ற தீபாவோ “மாமா நான் ஒன்னு கேட்பேன் இல்லைனு சொல்லக்கூடாது சொத்து தான் பிரிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க இப்போ நான் கேட்க போறதை மறுக்க கூடாது” என்றாள் பீடிகையோடு.

அழகம்மையோ மாமியாரை மிஞ்சிடுவாள் போலயே என்ன கேட்கப்போறாளோ தெரியலையே என்று அவளையே பார்த்திருந்தார் ஆயாசமாக.

“கேளுமா” என்றான் ராயன்.

“அத்தைகிட்ட நம்ம பரம்பரை நகையை பார்க்கணும்னு ஆசையா கேட்டேன் அத்தை காட்டினாங்க அதுல எனக்கு வைர அட்டிகை பிடிச்சு இருந்துச்சு. ஆனா அத்தை எனக்கு அட்டிகையை தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க வைர அட்டிகை முல்லைக்கு கொடுக்கணும்னு சொன்னாங்க ஆனா எனக்கு வைர அட்டிகைத்தான் வேணும் மாமா” என ஒற்றைக்காலில் நின்றாள் தீபா.

‘அல்பம் இவ கிட்ட இல்லாத நகையா முல்லை அண்ணிக்கு கொடுக்கப்போற நகைனு தெரிஞ்சும் வந்து கேட்குறா இவ பின்னால அலைஞ்சு திரிஞ்சு லவ் பண்ணினேன் பாரு என்னை செருப்பால அடிக்கணும்’ எனறு நொந்துக் கொண்ட கண்ணனோ “ஏய் உனக்கு நான் வைர அட்டிகை வாங்கித்தரேன் அண்ணிக்கு போட வேண்டியதை கேட்காதே அல்பமா இருக்கு” என்று கண்ணன் தீபாவை முறைத்தான்.

“எனக்கு இந்த வீட்டு நகையை கேட்க உரிமை இருக்குதானே மாமா உங்க தம்பி என்கிட்டே கேட்காதேன்னு சண்டைக்கு வராரு” என்று ராயனிடம் பஞ்சாயத்துக்குச் சென்றாள்.

“அப்படியில்லமா” என்று ராயன் பேச ஆரம்பிக்கும் முன்பு முல்லையோ “மச்சான் வைர அட்டிகையை தீபாவுக்கே கொடுத்துடுங்க” என்றாள் பெருந்தன்மையாக முல்லை.

ராயனோ “வைர அட்டிகையை உனக்கு  போட்டுக்க தரச்சொல்லுறேன்” என்றான் சின்னச் சிரிப்புடன்.

“தேங்க்ஸ் மாமா” என்று துள்ளிக்குதித்து ஓடினாள்.

அழகம்மைக்கு மனதே இல்லை. “ஏன் ராயா முல்லைக்கு கொடுக்க வேண்டிய பரம்பரை நகையை தீபா கேட்டதும் கொடுக்க சொன்ன” என்றார் கோபத்தோடு.

“அத்தை பாட்டியோட வைர அட்டிகை அம்மாகிட்ட ஒன்னு இருக்கு அதை முல்லைக்கு கொடுத்திடலாம் விடுங்க நகையால பிரச்சனை வேணாம் அத்தை” என்றான் நடுநாயகமாக.

கண்ணனோ ராயன் முன் சங்கடப்பட்டு நின்றவன் “அண்ணா அவ சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றான்.

“இருக்கட்டும்டா இதெல்லாம் சின்ன பிரச்சனை பெரிசு பண்ணக்கூடாது தூங்குற வழிய பாரு” என்றிருந்தான் ராயன்.

தீபாவோ “அப்பா நான் நகையை வச்சு பிரச்சனை பண்ணலாம்னு இருந்தேன் ஆனா ராயன் ஈசியா முடிச்சிட்டாரு இந்த வீட்டு சொத்தை பிரிக்க என்னால முடியாது போலவே” என்றாள் சோகமாக.

“முயற்சி பண்ணுமா உன்னால முடியும்” என்று மகளுக்கு ஸ்க்ரூ ஏத்தி விட்டார் நாளை நடக்க போகும் விபரீதம் தெரியாமல்.

“பார்க்குறேன் பா அவரு வராரு நான் போனை வைக்குறேன்” என்று கண்ணன் அறைக்குள் நுழைய போனில் ரீல்ஸ் பார்ப்பது போல காட்டிக்கொண்டாள்.

“ஏய் அல்பம் நகைக்கு பேயா அலையுற முல்லை அண்ணி பாரு நகை உனக்கு கொடுக்க சொல்லி பெருந்தன்மையா சொன்னாங்க அவங்களுக்கும் உனக்கும் ஏணி வச்சா கூட எட்டாதுடி உன்னையெல்லாம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன் பாரு” என்று தலையில் அடித்துக்கொண்டு படுத்துவிட்டான்.

“போடா உனக்குத்தான் பிழைக்கத்தெரியல நான் இப்படியே ஒவ்வொரு நகையா கேட்டு வாங்கி வச்சிப்பேன் நாளைக்கு நமக்கு பிறக்க போற குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கணும்ல சொத்து இருக்குனு நகை வேணாம்னு சொல்ல முடியுமாடா” என்று ஆர்ப்பரித்தாள்.

கண்ணனோ குறட்டை விட்டான். 

வளைகாப்பிற்கு மூன்று நாட்கள்தான் இருந்தது. தன்வீட்டின் பக்கத்தில் சாமியானா போட்டு திருவிழா போல வளைகாப்பை நடத்த ஏற்பாடு செய்திருந்தான் ராயன்.

அடுத்த நாள் காலையில் தீபா சமையல்கட்டில் வேலைபார்த்ததுக்கொண்டிருந்தவள் அப்படியே மயங்கி விழுந்தாள். 

அமுதாவோ “அச்சோ தீபா என்னமா ஆச்சு?” என்று மயங்கிவிழுந்தவளை பிடித்து நாற்காலியில் சாய்த்து உட்கார வைத்து தண்ணீரை முகத்தில் தெளித்தார். 

அமுதாவின் சத்தம் கேட்டு அழகம்மையும் சமையல் கட்டுக்கு வந்துவிட்டார்.

தீபா கண்விழித்ததும் “என்னம்மா ஆச்சு?” என்று தீபாவின் கையை பிடித்து நாடி பார்த்து “தலைக்கு ஊத்தி எத்தனை நாள் ஆகுது இந்த மாசம் நீ தலைக்கு ஊத்தின போலயே எனக்கு தெரியலையேமா” என்றவரிடம் “ஆமா அத்தை நாள் தள்ளிப்போயிருக்கு” என்றாள் வெட்கப்பட்டுக்கொண்டே.

கோமளத்துக்கு தலைகால் புரியவில்லை. “தலைநாளு பேரனா பெத்துக்கொடுத்து முல்லைக்கு வயிறு பெரிசா இருக்கு அவளுக்கு பெண்பிள்ளைதான் பிறக்கும்” என்று யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை மனதில் உள்ளதை பட்டென்று சொல்லி விட்டார்.

அழகம்மையோ “வயிறு பெருசா இருக்கறதை வச்சு என்ன குழந்தைனு சொல்ல முடியாதுல்ல அண்ணி”

“எனக்கு தெரியாதது உனக்கு தெரியப்போகுதாக்கும் தீபாவுக்கு பால் ஏதாவது குடிக்க கொடு” என்று அதிகாரம் தான் செய்தார்.

அழகம்மையோ இவங்க திருந்தவே மாட்டாங்கபோல என்று தலையை ஆட்டியவர் தீபாவுக்கு பாலை சூடு செய்து கொடுத்தவர் “குடிச்சிட்டு நீ ரெஸ்ட் எடுமா நாங்க வேலையை பார்த்துக்குறோம்” என்றிருந்தார் அழகு.

வீட்டில் அனைவருக்கும் தீபா கர்ப்பம் ஆனது தெரியவர சந்தோசப்பட்டனர். தீபா அறைக்குள் சென்றதும் வெட்கப்பட்டு தலை குனிந்தாள்.

கண்ணன் குளித்து வந்தவன் “என்னடி இப்போ வெட்கப்படுற எனக்கு மூட் இல்லை” என்று தலையை துவட்டிக்கொண்டு பால்கனிக்குச் சென்றான்.

“அட என்புருசன் அரை வேக்காடு” என்று தலையில் அடித்துக்கொண்டு பால்கனிக்குச் சென்ற கண்ணனின் கையை எடுத்து அவளது வயிற்றில் வைத்தாள்.

“பசிக்குதா போய் சாப்பிட வேண்டியதுதானே?” என்று கடுப்பேற்றினான் தீபாவை.

“அடேய் நான் ப்ரக்னன்ட்டா இருக்கேன்டா” என்றாள் கோபத்துடன்.

“நிஜமாவா தீபு” என்று மனைவியை அணைத்துக்கொண்டான் அப்பா ஆகும் சந்தோசத்தில்.

“நிஜம்தான் டா” என்று கண்ணைச் சிமிட்டியவள் “அப்பா அம்மாகிட்ட சொல்லுறேன் ஹேப்பி ஆவாங்க” என்றாள் சந்தோசத்தில்.

“சரிடி சொல்லு” என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டு அணைப்பிலிருந்து விலக்கிவிட்டான்.

முதலில் மங்களத்திற்கு போன் போட்டாள் தீபா. ஒரே ரிங்கில் மகளின் போனை எடுத்துவிடுபவர் இன்று முழுவதும் ரிங்காகி கட் ஆகும்வரை எடுக்கவில்லை. அம்மாவுக்கு என்னாச்சு போன் எடுக்கலையே என்று அடுத்து பரமசிவத்துக்கு கூப்பிட்டாள் அவரும் போன் எடுக்கவில்லை. என்னாச்சு என்று அவளுக்கு சிறு பதட்டம் வந்தது.

“பிரேனஷ்க்கு பண்ணுவோம்” என்று முகத்தில் அரும்பிய வியர்வையை துடைத்து தம்பிக்கு அழைத்தாள். 

அவனும் போன் எடுக்கவில்லை. மீண்டும் மங்களத்திற்கு போன் போட அப்போதும் போன் எடுக்கவில்லை. கண்ணனோ பால்பண்ணைக்கு ரெடியாகி வந்தவன் “போன் பண்ணிட்டியா அம்மா அப்பா வரேன்னு சொன்னாங்களா?” என்று அவன் கேட்கவும்

“க.கண்ணா அப்பா, அம்மா, தம்பி மூணு பேருக்கும் ரொம்ப நேரமா போன் போடுறேன் யாரும் எடுக்கலை என்னனு தெரியலையே” என்றாள் பதட்டத்துடன்.

“ஏய் ஏதாவது வேலையா இருந்திருப்பாங்க இரு நான் கூப்பிடறேன்” என்று பிரனேஷ்க்கு போன் போட்டான் இம்முறையும் போன் எடுக்கவில்லை.

தீபாவோ “அச்சோ அம்மாவுக்கு ஏதும் உடம்பு சரியில்லாம போயிருக்குமோ அடிக்கடி மயக்கம் வருதுனு சொல்லுவாங்க கண்ணா நாம சென்னைக்கு கிளம்பலாம் வாங்க” என்று அவசரப்படுத்தினாள்.

“இந்த நேரத்துல நாம சென்னைக்கு போறது சரியில்லைடி இரு இன்னொரு முறை போன் பண்ணிப்பார்க்கலாம்” என்று தீபாவின் போனை வாங்கி மங்களத்தின் போனுக்கு போட்டான்.

ரெண்டு ரிங்கில் போன் எடுத்த மங்களமோ “தீ.தீபா நாம மோசம் போய்ட்டோம்டி உன் தம்பியோட ப்ரணட்ஸ் சில பேர் பிரேன்ஷ்க்கு ட்ரக் கொடுத்து ஒரு பொண்ணு கூட இருக்கும் படி போட்டோ எடுத்து என்ன என்னமோ நடந்துருச்சு ப்ரனேஷ் இப்போ ஹாஸ்பிட்டல இருக்கான். அப்பா அலைஞ்சுக்கிட்டு இருக்காருடி எனக்கு பயமா இருக்கு நீ கிளம்பி வரியா” என்றார் அழுகையுடன் மகள் மாசமாய் இருப்பது அறியாமல்.

“அத்தை பயப்படாதீங்க நாங்க இப்போவே சென்னைக்கு கிளம்பி வரோம்” என்ற கண்ணனோ ராயனிடம் நடந்ததை கூற ராயன் தாடையை தடவி போனை எடுத்தான்.

“மாமா நான் உங்ககிட்ட துடுக்குத்தனமா நகை வேணும் பணம் வேணும் சொத்தை பிரிச்சு கொடுங்கனு கேட்டேன்னு எங்கப்பாவுக்கு உதவி பண்ணாம விட்டிராதீங்க” என்று கைகூப்பி காலில் விழபோனவளின் கையை பிடித்து “கர்ப்பமா இருக்க பொண்ணு என் காலுல விழக்கூடாதுமா நான் பார்த்துக்குறேன் உன் அப்பாவோட சொத்துக்களை நான் வாங்கிக்கொடுக்குறேன்” என்று வாக்கு கொடுத்தவன் அடுத்த நிமிடம் சென்னையில் இருந்த கமிஷ்னர், வக்கீல் அனைவரிடமும் விசயத்தை கூறி “எனக்கு நீங்க சுமூகமா முடிச்சுக் கொடுங்க நான் சென்னைக்கு வந்துட்டே இருக்கேன்” என்றான் ராயன்.

நீலகண்டனும் தெய்வநாயகமும் “ராயா நாங்களும் வரோம்பா” என்றதும் “அப்பா, மாமா நீங்க ரெண்டு பேரும் வளைகாப்பு வேலையை பாருங்க நானும் கண்ணனும் போய்ட்டு வந்துடறோம்” என்றவனோ முல்லையை பார்த்து பத்திரமா இருக்கணும் என்று கண்ணசைத்து “கண்ணா போகலாம்டா” என்று வெளியே சென்றான்.

“கண்ணா நானும் வரேன்” என்று தீபா கூறியதும்

கோமளமோ “இப்போ பிரயாணம் பண்றது நல்லது இல்ல நீ போகக்கூடாது பெரியவன் பார்த்துப்பான் தீபா” என்றார் அதட்டலாக.

“அத்தை என் தம்பியை பார்க்கணும் அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலை. அவன் ட்ரக் யூஸ் பண்ணமாட்டான் குடிக்கறவங்களை கண்டாலே அவனுக்கு பிடிக்காது” என்றாள் அழுகையுடன்.

“எல்லாம் ராயன் பார்த்துப்பான் நீ அழாதேமா” என்று அழகம்மை அவளது கையை பிடித்துக்கொண்டார்.

ராயன் சென்னைக்குச் சென்றதும் பிரனேஷ்  இருக்கும் ஹாஸ்பிட்டலுக்குச் செல்ல அங்கே பரமசிவமும் மங்களமும் பிரனேஷ் இருந்த ஐ.சியுவின் முன்னே பதட்டத்துடன் நின்றிருந்தனர்.

“எப்படி மாமா நடந்துச்சு?” என்றான் பரமசிவத்தின் தோளைத்தொட்டு.

“மாப்பிள்ளை என் மகன் ட்ரக் அடிக்ட் கிடையாது. அவனோட ப்ரண்ட்ஸ் நல்லவங்க போல வேஷம் போட்டு அவனை ஏமாத்திட்டாங்க இப்போ போலீஸ் என் மகன் மேல ட்ரக் யூஸ் பண்ணிட்டான்னு கேஸ் போட்டிருக்காங்க என்னால ஒண்ணும் பண்ண முடியலை” முகத்தை பொத்திக்கொண்டு அழுதார்.

“நான் எனக்கு தெரிந்த கமிஷனர்கிட்ட பேசியிருக்கேன் மாமா பிரச்சனையை சுலபமா முடிச்சிடலாம்னு சொல்லியிருக்காரு” என்ற நேரத்தில் கமிஷனர் ராயனுக்கு போட்டார். 

“பரமசிவம் கம்பெனியோட ஆபிஸ்ல ரெண்டு கேமரா இருக்கு அதுல ஒன்னைதான் அவன் ப்ரண்ட்ஸ் உடைச்சி பிரனேஷ்க்கு ட்ரிங்ஸ் யூஸ் பண்ண சொல்லியிருக்காங்க அவரு மறுத்து இருப்பது கேமராவுல பதிவு ஆகியிருக்கு. அவரை வற்புறுத்தி குடிக்க வச்சியிருக்காங்க குடிச்ச கொஞ்ச நேரத்துல அவர் மயங்கினதும் பத்திரத்துல கையெழுத்து வாங்கின பிறகுதான் ஒரு பெண் வந்து பிரனேஷுடன் நெருக்கமா இருப்பது போல தெளிவா பதிவு ஆகியிருக்கு சோ நோ ப்ராப்ளம் கேஸ் ஈசியா முடிச்சிடலாம் கவலைவேண்டாம்” என்று ராயனிடம் கூறவும் “தேங்க்ஸ் சார்” என்று போனை வைத்திருந்தான் ராயன்.

இரவுதான் கண்விழித்தான் பிரனேஷ் சோசியல் மீடியா முழுக்க பிரனேஷ் மோசமானவன் என்று நியூஸ் வந்துவிட்டது. பரமசிவம் கம்பெனியின் பங்குகள் சரிந்து விட்டது. ஒரே நாளில் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட்டால் இப்படிதான் ஒரே நாளில் அழிந்துவிடும்.

ராயன் பிரச்சனைகளை முடித்துவிட்டு “மாமா இங்க இருக்க வேணாம் பிரனேஷ்க்கு ஒரு சேன்ஞ் வேணும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுங்க நாங்க கிளம்புறோம்” என பரமசிவத்துக்கு ஆறுதல் கூறினான்.

“ரொம்ப நன்றி மாப்பிள்ளை நீங்க இல்லைனா இந்நேரம் எங்க குடும்பம் என்ன கதியாகியிருக்குமோ தெரியலை” என்று ராயனின் கையை பிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தார் பரமசிவம்.

“எல்லாம் சரியாகும் மாமா நாங்க கிளம்புறோம்” என்று கிளம்பிவிட்டனர் ராயனும் கண்ணனும். 

தீபாவோ பரம்பரை வைர அட்டிகையை முல்லையின் கழுத்தில் போட்டுவிட்டு “இந்த அட்டிகை உனக்குத்தான் எடுப்பா இருக்கும் நான் உன்னை விட நிறம் கொஞ்சம் கம்மியா இருக்கேன் முல்லை” என்றாள் புன்னகையுடன்.

தன் குடும்பத்து பிரச்சனையை தீர்த்து வைத்த ராயன் மேல மரியாதை கூடியது தீபாவிற்கு. மனம் திருந்தி விட்டாள். காசு பணம் முக்கியம் இல்லை சொந்தம் தான் முக்கியம் என்று பட்டு தெரிந்துக் கொண்டாள் தீபா.

பூங்கொடியோ குமுதாவையும் அரசியையும் வளைகாப்பிற்கு அழைத்துவந்திருந்தாள். தென்னரசுவோ வளைகாப்பு முடிந்து பந்தியை கவனிக்க நாற்காலியை போடச் சொல்லி ஆட்களிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்தான்.

பரமசிவம் மகனுடன் வந்துவிட்டார் வளைகாப்பிற்கு பிரேனஷ் தீபாவின் அறையை விட்டு வெளியே வரவில்லை. கலகலவென்று இருப்பவன் இப்போது பிரம்மை பிடித்தவன் போல அமர்ந்திருந்தான்.

தம்பியை அணைத்துக்கொண்டு “நீ நல்லவன் டா உன்னோட வளர்ச்சி கண்டு பொறாமையில எல்லாம் பண்ணி இருக்காங்க நீ சென்னை போக வேணாம் ராயன் மாமா கிட்ட இந்த ஊருல பிஸ்னஸ் ஏற்பாடு பண்ணி தர சொல்லுறேன்” என்றாள்.

பிரனேஷோ “இல்லக்கா நான் துவண்டு போகமாட்டேன் ராயன் மாமா என்னை சென்னையில் தான் பிஸ்னஸ் பண்ண சொல்லி இருக்காரு” என்றான் உறுதியாக.

வளைகாப்பு ஆரம்பம் ஆனது. முல்லைக்கு சந்தோசம் முகத்தில் தாண்டவம் ஆடியது. அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். தோழி நதியா மட்டும் வரவில்லையென்று வாசலையே பார்த்திருந்தாள் முல்லை.

பாலாஜியும் நதியாவும் வீட்டுக்குள் தயங்கிக்கொண்டு வர கோமளம் மட்டும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

தையல்நாயகி நதியாவுடன் ஒருநாள் இருந்து விட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.

“இப்போ காய்ச்சல் சரியாகிடுச்சுதானே?” என்று அழகம்மை நதியாவின் கன்னத்தை பிடித்தார்.

“இப்போ நான் நல்லாயிருக்கேன் அத்தை” என்றாள். 

அவளது கழுத்தில் தாலிச் செயினை தவிர வேறு எதுவும் போடவில்லை. 

நாயகியோ தன் கழுத்தில் போட்டிருந்த ரெட்டைவடச்செயினை கழட்டி நதியாவின் கழுத்தில் போட போக “வேணாம் சித்தி அம்மா ஏதும் சொல்லுவாங்க” என்று மறுத்துவிட்டாள்.

அழகம்மையோ “நதியா என்னோட நகைகள் இருக்கு வா அத்தை நான் உனக்கு போட்டு விடுறேன்” என்றதும்

“ஏன் அத்தை நான் ஒரு செயினோட வந்தா என் ப்ரண்ட்க்கு வளையல் போட விடமாட்டீங்களா?” என்றாள் விளையாட்டாக.

“அடி கழுதை என்ன பேச்சு பேசுற நாங்க எல்லாம் கழுத்து நிறைய நகை போட்டிருக்கோம் நான் வளர்த்த பொண்ணு ஒரு நகை மட்டும் போட்டிருந்தா எங்களுக்கு மனசு ஒப்புமா சொல்லு புள்ள” என்று நதியாவை செல்லமாய் மிரட்டினார்.

“எனக்கு இந்த ஒரு செயின் போதும் அத்தை” என்றவளோ முல்லையின் பக்கம் சென்று நின்றுக் கொண்டாள்.

வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது. பெரியவர்கள் நலங்கு வைத்து வளையல் போட்டு விட்டனர் கோமளம் மட்டும் மகளை பார்ப்பதும் முகத்தை திருப்புவதுமாக இருந்தார்.

3 thoughts on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top